‘எலி’ மூலம் குறி வைத்த தாவூத்... சிக்காமல் நழுவித் தப்பிய சோட்டா ராஜன்
மும்பை: நிழல் உலக தாதாக்களின் கதைகளை கேட்டாலே சிலிர்க்கும். சில ரத்தச்சரித்திரங்கள் மயக்கத்தை ஏற்படுத்தும்... சில கேங்ஸ்டார் மோதல்கள் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தும்.
மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்தில் தேடப்படும் சர்வதேச குற்றவாளியான தாவூத் இப்ராஹிம் இந்திய போலீசின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு பதுங்கி வாழ்ந்து வரும் நிலையில், அவனது என்கவுண்டருக்கே சிக்காமல் சோட்டா ராஜன் தப்பிய சம்பவம் தற்போது வெளியாகியுள்ளது. ஒரு க்ரைம், திரில்லர் நாவலைப்போல உள்ள அந்த சம்பவத்தைப் படியுங்களேன்.
நிழல் உலக தாதாக்கள்
மும்பையில் ஒரு காலத்தில் அன்டர்கிரவுண்ட் மாஃபியாவாக அசைக்க முடியாத சக்தியாக வலம் வந்தவன் தாவூத் இப்ராஹிம். இந்த கும்பலில் தாவூத்தின் தளபதியாக வலம் வந்தவன் சோட்டா ராஜன். போதை பொருள் கடத்தல், குண்டுவெடிப்பு, உள்ளிட்ட பல சட்டவிரோத செயல்களை செய்து வந்த இந்த கும்பலில் கருத்து வேறுபாடு ஏற்படவே சோட்டா ராஜன், தாவூத் இடையே பிரிவு ஏற்பட்டது.
தாவூத் போட்ட திட்டம்
இருவரும் எதிர் எதிராக தனி அணியாக செயல்பட ஆரம்பித்தனர். இருவருக்குமிடையே நேரடி மோதல் ஏற்பட்டது. இதையடுத்து சோட்டா ராஜனின் கதையை முடிக்க திட்டமிட்ட தாவூத், அதற்காக தனது வலது கையான சோட்டா ஷகீலிடம் ஸ்கெட்ச் போடும் பொறுப்பை ஒப்படைத்தான்.
சோட்டாராஜன் வளைப்பு
ஷகீலும் தனது தாதா மூளையை பயன்படுத்தி சோட்டா ராஜனின் வலது கையாக இருந்த ஒருவனை மூளைச்சலவை செய்து ‘உளவு எலி' யாக மாற்றினான். அடுத்த சில நாட்களிலேயே ராஜனின் இருப்பிடம் பற்றி அந்த உளவாளி ஷகீலிடம் தெரிவிக்க, கடந்த 2000ம் ஆண்டு பாங்காங்கில் உள்ள மார்க்கெட்டில் தாவூத் ஆட்கள் ராஜனை சுற்றி வளைத்தனர்.
பொழிந்த குண்டு மழை
சோட்டா ராஜன் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. எதிரணியினர் பொழிந்த குண்டுமழையில் சோட்டாவின் உடலில் பல இடங்களில் குண்டு பாய்ந்தது. எனினும் தீவிர சிகிச்சைக்கு பின் ராஜன் உயிர் பிழைத்தார்.
பதுங்கிய ராஜன்
இதனையடுத்து தலைமறைவான ராஜன், தனது இருப்பிடத்தை படுரகசியமாக வைத்திருந்தார். எனினும் தனது எதிரியை தீர்த்து கட்டவேண்டும் என்ற எண்ணம் தாவூத்தின் மனதில் நீரு பூத்த நெருப்பாக கனன்று கொண்டிருந்தது.
15 ஆண்டுகளுக்குப் பின்னர்
சோட்டா ராஜனின் இருப்பிடத்தை அறிந்து கொள்ள பல வழிகளில் முயன்றும் கண்டு பிடிக்க முடியவில்லை. ராஜன் சுடப்பட்டு ஏறத்தாழ 15 வருடங்களுக்கு பின் கடந்த ஏப்ரல் மாதம் மீண்டும் அவரை பற்றி தகவல் அறிய அந்த 'எலியை' ஷகீல் தொடர்பு கொண்டான்.
எலிக்கு வலை விரிப்பு
‘எலி'க்கு ஏராளமான பணம் தருவதாக ஆசை வார்த்தை பேசினான் ஷகீல். ஆனால் எலியோ கடந்த 2000ம் ஆண்டு தகவல் தந்தும் ராஜனின் கதையை முடிக்காதது ஏன் என்று கேட்டதோடு, ராஜனின் இருப்பிடத்தை தெரிவிக்க மறுத்துவிட்டார்.
வச்ச குறி தப்பாது
ஷகீல், தனது முயற்சியை கைவிடாமல் ‘எலி'யை விரட்டினான். கடந்த முறை குறி தப்பிவிட்டது. ஆனால் இம்முறை கண்டிப்பாக குறி தவறாது. உங்களுக்கு என்னவேண்டுமோ அதை நாங்கள் செய்வோம் என்று மறுபடியும் மூளை சலவை செய்தான்.
இந்திய உளவுத்துறை
இவையனைத்தும் கராச்சியிலிருந்து நேபாள நாட்டு தொலைபேசி எண் மூலம் பேசப்பட்டதால் அந்த தொலைபேசி உரையாடலை இந்திய உளவுத்துறை தீவிரமாக கண்காணிக்க ஆரம்பித்தது. இதில் இரு தரப்பிலும் இந்தி மற்றும் உருது மொழியில் பேசப்பட்ட வாசகங்களை வைத்து ராஜனின் கதையை முடிக்க தாவூத் திட்டமிட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
ராஜன் தப்பக்கூடாது
ஆஸ்திரேலியாவில் உள்ள நியூகேஸ்டிலில் ராஜன் இருப்பதை ஷகீலுக்கு 'எலி'போட்டுக்கொடுத்தது. இதையடுத்து மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து தாவூதின் கும்பலை சேர்ந்த ஆட்கள் களமிறங்கினர். எக்காரணம் கொண்டும் இம்முறை ராஜன் தப்பிவிடக்கூடாது என்று பலத்த எச்சரிக்கையுடன் ஆட்களை அனுப்பி வைத்தான் ஷகீல்.
பாதாளத்தில் பதுங்கிய ராஜன்
ஷகீல் ஆட்கள் தன்னை வேவு பார்ப்பதை மோப்பம் பிடித்த ராஜன் அவனின் தொலைபேசி உரையாடலை ஒட்டு கேட்க ரகசிய ஏற்பாடு செய்தார். அவர்கள் ராஜனின் ஆஸ்திரேலியா மறைவிடம் ஷகீலுக்கு தெரிந்துவிட்டது குறித்து உஷார்படுத்த, ராஜன் தனது இருப்பிடத்தை யாராலும் அறிந்து கொள்ள முடியாது மாற்றிக்கொண்டார்.
எப்போது முடியும்?
தாவூதின் என்கவுண்டர் தோட்டாவிலிருந்தும் 2வது முறையாக சோட்டா ராஜன் தப்பிவிட்டார். இரண்டு முறையும் ராஜனுக்கு தாங்கள் வைத்த குறி தவறியதால் ஷகீல் பல்லை கடித்துக்கொண்டு காத்திருக்கிறான்...
அந்தப்பக்கம்... ஹ.... ஹ...ஹ... ஐயம் வெயிட்டிங் என்று விஜய் பாணியில் கூறி சிரிக்கிறாராம் ராஜன். இந்த கண்ணாமூச்சி விளையாட்டு எப்போது முடியுமோ தெரியலையே?!.