தாவூத் பதுங்கியிருப்பது பாகிஸ்தானில்தான்...: அடித்து சொல்கிறார் 'ரா' முன்னாள் தலைவர் சகாய்
டெல்லி: நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில்தான் பதுங்கியிருக்கிறார் என்று இந்திய அரசின் கொள்கை வகுப்பு பிரிவான 'ரா' அமைப்பின் முன்னாள் தலைவர் சி.டி. சகாய் உறுதிபட தெரிவித்துள்ளார்.
1993ஆம் ஆண்டு மும்பை தொடர் குண்டுவெடிப்பை நிகழ்த்திய தாவூத் இப்ராஹிம் 22 ஆண்டுகாலமாக தலைமறைவாக இருக்கிறார். பாகிஸ்தானில் பதுங்கி இருப்பதாக கூறி வந்த மத்திய அரசு இப்போது தாவூத் இருப்பிடமே தெரியவில்லை என்கிறது.
இந்த நிலையில் தாவூத் இப்ராஹிம் குறித்து நமது ஒன் இந்தியா இணையதளத்துக்கு 'ரா' அமைப்பின் முன்னாள் தலைவர் சி.டி. சகாய் அளித்த சிறப்புப் பேட்டி:
தாவூத் இப்ராஹிம் குறித்து இப்போது நாம் பேசிக் கொண்டிருக்கிறோம்.. 1990களில் நடந்தது குண்டுவெடிப்பு. தற்போதும் அதைப் பற்றி பேசுவது பொருத்தமே இல்லாதது.. தப்பியோடிய தலைமறைவு குற்றவாளி சரணடைவது குறித்து சர்வசாதாரணமாக பேசுகிற நிலைமை வந்துவிட்டது.
அப்படி தாவூத் சரணடைவதாக இருந்தால் சரியான வழிகளில் அதற்கு முயற்சித்திருக்க வேண்டும். அப்படியே சரணடைய வேண்டும் எனில் முதலில் பாகிஸ்தானிடம் தாவூத் ஒப்புதல் பெற வேண்டும். ஏனெனில் தாவூத்துக்கு அடைக்கலம் கொடுத்தது பாகிஸ்தான்.. என்னைப் பொறுத்தவரையில் தாவூத் சரண்டர் குறித்து இப்போது பேசுவது பொருத்தமற்றது.
பாகிஸ்தானுக்குள் நுழைந்த போது உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.க்கும் தாவூத்துக்கும் இடையே ஒரு நீண்டகால ஒப்பந்தம் போட்டிருக்க வேண்டும். பாகிஸ்தானைப் பொறுத்தவரையில் தாவூத் முக்கிய சொத்து. இந்தியாவுக்கு எதிரான நபர் என்பதால் மட்டுமின்றி பல்வேறு வகைகளிலும் பாகிஸ்தானுக்கு தாவூத் தேவை.. ஏனெனில் அப்படி ஒரு நெட்வொர்க் தாவூத்துக்கு இருக்கிறது.. அது ஐ.எஸ்.ஐ.க்கும் தேவை..
தாவூத் சரணடைய விரும்பியது நீண்டகாலத்துக்கு முன்பு நடைபெற்ற நிகழ்வு.. அதுவும் பாகிஸ்தானுக்குள் அடைக்கலம் தேடிப் போன காலத்தில் அப்படி ஒரு விருப்பத்தை தாவூத் வெளிப்படுத்தியது.. எங்களைப் பொறுத்தவரை அது ஒரு பெரிய விஷயமே அல்ல.
தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானைத் தவிர வேறு எங்கும் பதுங்கி இருக்க முடியாது. கராச்சியில்தான் தாவூத் நீண்டகாலம் இருந்தார்.. பாகிஸ்தானும் தாவூத்தை அவ்வளவு எளிதாக விட்டுவிடாது.. அதேபோல் லாகூரில் சகல வசதிகளுடன் தாவூத் இருந்ததும் தெரியும்.. பாகிஸ்தானில் சர்வசாதரணமாக தாவூத் நடமாடிக் கொண்டிருக்கும் நிலையில் சரணடைவதாக எப்போதோ சொன்னது இப்போது தலைப்புச் செய்திகளாக இருக்கிறது.. சேனல்களில் விவாதத்துக்கு மட்டும்தான் இது பயன்படும்..
இவ்வாறு சகாய் கூறியுள்ளார்.