தயாநிதி மாறனிடம் 3வது நாளாக இன்றும் விசாரணை! தகவல்களை மறைப்பதாக சி.பி.ஐ. அதிருப்தி!!
டெல்லி: சட்டவிரோதமாக பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்பகம் ஏற்படுத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் சுமார் 3வது நாளாக இன்றும் விசாரணை நடத்தினர். கடந்த 2 நாட்களாக நடத்தப்பட்ட விசாரணையில் தயாநிதி மாறன் பல தகவல்களை மறைத்ததாகவும் இதனால் தொடர்ந்து விசாரணை நடத்தப்படுவதாகவும் சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மத்திய தொலைத் தொடர்புத் துறையின் அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தபோது 323 தொலைபேசி இணைப்புகளை தனது சகோதரர் கலாநிதி மாறனின் நிறுவனமான சன் தொலைக்காட்சிக்கு முறைகேடாக வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில் தயாநிதி மாறன், பி.எஸ்.என்.எல். பொது மேலாளராக இருந்த கே.பிரம்மநாதன், துணைப் பொது மேலாளராக இருந்த எம்.பி.வேலுச்சாமி ஆகியோர் மீது சி.பி.ஐ. போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக தயாநிதி மாறனின் தனிச் செயலாளராக இருந்த வி.கவுதமன், சன் டி.வி.யின் முதன்மை தொழில்நுட்ப அதிகாரி கண்ணன், எலக்ட்ரீஷியன் எல்.எஸ்.ரவி ஆகியோரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர் இந்த மூவரும் ஜாமீனில் வெளிவந்தனர்.
இந்த வழக்கில் தயாநிதி மாறனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் 6 மாத கால இடைக்கால ஜாமீன் வழங்கியிருந்தது. இதன் பின்னர் சென்னை சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஆஜராகி பிணைத் தொகை செலுத்தி முன்ஜாமீன் பெற்றார்.
இந்நிலையில் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமையகத்தில் கடந்த 2 நாட்களாக தயாநிதி மாறனிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் இன்று 3-வது நாளாகவும் தயாநிதி மாறனிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
கடந்த 2 நாட்களாக நடத்தப்பட்ட விசாரணையின் போது தயாநிதி மாறன் அளித்த பதில்கள் திருப்தி அளிக்கவில்லை; பல தகவல்களை மறைக்கிறார் என்பதால் தொடர்ந்து விசாரணை நடத்தப்படுவதாக சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.