வாழ்நாள் சாதனையாளர் விருது வென்ற அழகிய பெண் புலி மச்சிலி மரணம்...
ஜெய்ப்பூர்: உலகிலேயே ''புகைப்படத்திற்கான அழகிய பெண் புலி'' என்ற பெயர் பெற்ற மச்சிலி புலி நேற்று இறந்தது. இதற்கு வயது 19. இது வாழ்நாள் சாதனையாளர் விருது வென்ற புலியாகும்.
ரன்தம்போர் தேசிய பூங்காவில் வசித்து வந்த இந்த புலி உடல்நலக்குறைவால் உணவருந்தாமல் மரணமடைந்தது புலி ஆர்வலர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ரந்தம்போர் தேசிய பூங்காவில் 1998ம் ஆண்டு மச்சிலி என்ற பெண் புலி பிறந்தது. இது வளர்ந்து அப்பகுதியில் தனது ஆதிக்கத்தை செலுத்த தொடங்கியது.
அழகிய பெண் புலி
உலகிலேயே புகைப்படத்திற்கான அழகிய பெண்புலி என்ற பெயர் பெற்ற மச்சிலியின் முகத்தில் மீன் போன்ற தோற்றம் இருப்பதால், அதற்கு மச்சிலி என்று பெயரிடப்பட்டது.
வருமானம் கொடுத்த ராணி
ராணியாக திகழ்ந்து வந்த மச்சிலி புலியை, சமூக ஆர்வலர்கள் ஏரியின் பெண்மணி என்று அழைத்தனர். கடந்த 10 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் ரன்தம்போர் தேசிய பூங்காவிற்கு 10 மில்லியன் டாலர் வருமானம் பெற்றுக் கொடுத்துள்ளது இந்த மச்சிலி.
முதலையை கொன்ற புலி
ஏரியில் இருந்த முதலைகளுடன் சண்டையிட்டு, மூன்று முதலைகளை கொன்று விட்டது. மச்சிலி புலி இந்தியாவில் தனது வாழ்நாளில் அதிக வருமானத்தை ஈட்டித் தந்துள்ளது.
11 குட்டிகள்
தன்னுடைய வாழ்நாளில் 11 குட்டிகளை ஈன்று, அவற்றை காக்க பல்வேறு சாகச நிகழ்வுகளை நிகழ்த்தியுள்ளது. இதற்கு டெல்லியைச் சேர்ந்த புலிகளுக்கான பயண ஏற்பாட்டாளர் குழுமம் மச்சிலிக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கியது.
உடல்நலக்குறைவு
கடந்த சில நாட்களுக்கு உடல்நலக்குறைவால் மச்சிலி புலி பாதிக்கப்பட்டு உணவு அருந்தாமல் இருந்து வந்தது. இதையடுத்து இன்று சிகிச்சை பலனின்றி பெண் புலி மச்சிலி உயிரிழந்தது. இதன் இறுதிச் சடங்கை வன அதிகாரிகள் அந்த வனப்பகுதியிலேயே சோகத்துடன் செய்தனர்.