"சசி அத்தை"யை பெங்களூரு சிறைக்குப் போய் பார்த்த ஜெ. அண்ணன் மகன் தீபக்
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை, இன்று ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெங்களூரு: தமிழக அரசியல் கடந்த 15 நாட்களாகவே பரபரப்பாக காணப்படுகிறது. முன்னாள் முதல்வர் ஒ. பன்னீர் செல்வத்தின் ராஜினாமா, அவரது தியான புரட்சி அதனைத் தொடர்ந்து கட்சியில் ஏற்பட்ட பிளவு என பரபரப்பாகவே உள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்றதை அடுத்து புதிய முதல்வராக பதவியேற்றார் எடப்பாடி பழனிச்சாமி. நம்பிக்கை வாக்கெடுப்பிலும் வெற்றி பெற்றுள்ளார். சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, தமிழக அரசியல் நிலவரங்களை டிவியில் பார்த்து வருகிறார். அவ்வப்போது தொலைபேசியில் பேசி ஆலோசனைகள் கூறுவதாகவும் தகவல் வெளியானது.
இந்த நிலையில் இன்று சசிகலாவை அவரது அக்காள் மகனும், அதிமுக துணை பொதுச்செயலாளருமான டிடிவி தினகரன் நேரில் சென்று சந்தித்தார். அவருடன் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக்கும் சென்றிருந்தார்.
சசிகலாவிற்கு எதிரான மனநிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா இருக்கிறார். அதே நேரத்தில் அவரது சகோதரர் தீபக், ஆரம்பத்தில் இருந்தே சசிகலாவிற்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகிறார். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போதும் சசிகலா உடன் இருந்தார். சசிகலா சிறைக்கு முன்பாக கூவத்தூர் ரிசார்ட்டில் ஆலோசனை நடத்திய போதும் தீபக் உடனிருந்தார். இந்த நிலையில் டிடிவி தினகரனுடன் பெங்களூரு சென்று சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்து உள்ளார்.
சசிகலாவை, சசி அத்தை என்று பாசமாக அழைத்து வருகிறார் தீபக் என்பது குறிப்பிடத்தக்கது. சிறையில் அடைக்கப்பட்டிருந்த அத்தையை அதே பாசத்தோடு சென்று பார்த்து பேசியிருக்கிறார் தீபக். சசிகலாவிற்கு எதிராக தீபா தமிழகம் முழுவதும் பயணம் செல்ல உள்ள நிலையில் தீபக் பெங்களூரு சென்று சசிகலாவுடன் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.