ஜெ. வழக்கு: கர்நாடக அப்பீல் மனுவில் தவறுகள், பேப்பர் மிஸ்சிங்! அதிர்ச்சியில் ஆச்சாரியா
டெல்லி: ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு மனுவில் சில முக்கிய தகவல்களை அரசு தரப்பு சேர்க்காமல் விட்டுவிட்டதாக கூறப்படுகிறது. இந்த தவறு எப்படி நடந்தது என்ற புரியாத நிலையில், தவறுகளை திருத்தி சரி செய்து தரப்படும் என்று அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞர் பி.வி.ஆச்சாரியா தெரிவித்தார்.
சொத்துக்குவிப்பு வழக்கில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு, 4 ஆண்டுகாலம் சிறை தண்டனை மற்றும், 100 கோடி அபராதம் விதித்து தீர்ப்பளித்தது பெங்களூர் சிறப்பு நீதிமன்றம். இதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில், ஜெயலலிதாவை விடுதலை செய்து உத்தரவிட்டது, கர்நாடக ஹைகோர்ட்.
சுப்ரீம்கோர்ட்டில் அப்பீல்
இதையடுத்து கர்நாடக அரசு சார்பில் கடந்த மாதம் 23ம் தேதி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கறிஞர் அரிஸ்டாடில் இம்மனுவை தாக்கல் செய்தார். கர்நாடக ஹைகோர்ட் தீர்ப்பில் குளறுபடிகள் உள்ளதாக கர்நாடக மனுவில் கூறப்பட்டுள்ளது. கணித கூட்டல் தவறுகளும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஜெயலலிதாவை முதல்வர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அன்பழகனும் அப்பீல்
இந்நிலையில், திமுகவின் அன்பழகன் சார்பிலும், நேற்று உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவிலும், கர்நாடக ஹைகோர்ட் தீர்ப்பிலுள்ள தவறுகள், குழறுபடிகள் சுட்டிக்காண்பிக்கப்பட்டன. இம்மனுவையும், அரசு தரப்பு மனுவோடு சுப்ரீம்கோர்ட் இணைத்து விசாரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
தகவல்கள் மிஸ்சிங்
இந்த மனு அடுத்தவாரம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மனுவில் தவறுகள் இருப்பதாக உச்சநீதிமன்ற பதிவாளர் அரசு தரப்புக்கு சுட்டிக்காட்டியுள்ளார். ஆச்சாரியாவை இவ்வழக்கில், ஆஜராக கர்நாடக அரசு உத்தரவிட்ட வக்காலத்து ஆணையை கூட மனுவில் இணைக்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
காலி பேப்பர்கள்
என்னென்ன தவறுகள் என்பது குறித்து கர்நாடக அரசு தரப்பில் பெயர் தெரிவிக்கவிரும்பாத சிலர் கூறியதாவது: அப்பீல் மனுவின் 1223ம் பக்கம் மற்றும் 1453ம் பக்கங்கள் காலி பேப்பர்களாக உள்ளன. அதில் இருந்த தகவல்கள் மிஸ் ஆகியுள்ளன. ஒரிஜினல் பிரமாணப் பத்திரம் இணைக்கப்படவில்லை இதுபோன்ற சில தவறுகள் உள்ளன. இவ்வாறு அந்த தரப்பு தெரிவித்தது.
சகஜம்தான்
இதுகுறித்து வழக்கறிஞர் ஆச்சாரியாவை, 'தட்ஸ்தமிழ்' தொடர்பு கொண்டு கேட்டபோது, "மனு தாக்கலின்போது சிறு தவறுகள் ஏற்படுவதும், அதை சரி செய்து கொடுப்பது வழக்குகளில் சகஜமான ஒன்றுதான். இதிலும், கேட்டிருக்கும் தகவல்கள் இணைத்து கொடுக்கப்படும்" என்றார். இருப்பினும், என்னென்ன விளக்கங்கள் கேட்கப்பட்டுள்ளன என்பதை அவர் தெரிவிக்கவில்லை.
மர்மம் நீடிப்பு
மனுத்தாக்கலின்போது சில தவறுகள் நடப்பது சகஜம் என்ற போதிலும், ஆச்சாரியா, சந்தேஷ்சவுட்டா, அரிஸ்டாடில் போன்ற மூத்த வழக்கறிஞர் குழுவின் மேற்பார்வையில் தயாரான மனுவில், வெற்று காகிதம் இருப்பது, முக்கிய தகவல் சில விடுபட்டிருப்பது போன்றவற்றுக்கு வாய்ப்பு மிக குறைவு. எனவே, இதில் நடந்த தவறு மர்மத்தை ஏற்படுத்தியுள்ளது. தவறுகளை திருத்தி கொடுத்ததும், அடுத்தவாரத்தில் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படலாம் என்று தெரிகிறது.