தயாநிதி மாறனிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் சரமாரி கேள்வி.. முழு ஒத்துழைப்பு அளிப்பேன் என பேட்டி..
டெல்லி: தொலைபேசி இணைப்பு வழக்கு தொடர்பாக தயாநிதிமாறனிடம் சிபிஐ அதிகாரிகள் இன்றும் பல மணி நேரம் சரமாரி கேள்வி எழுப்பினர்.
விசாரணை முடிந்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தயாநிதி விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்ததாகவும், எந்த நேரத்தில் விசாரணைக்கு அழைத்தாலும் அதனை எதிர்கொள்ளத் தயார் என்றும், தெரிவித்துள்ளார்.
பி.எஸ்.என்.எல். தொலைப்பேசி இணைப்புகளை முறைகேடாக பயன்படுத்தியதன் மூலம் மத்திய அரசுக்கு ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்படுத்தியுள்ளதாக, தயாநிதி மாறன் மீது சி.பி.ஐ. குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக அவரிடம் நேற்று (புதன்கிழமை) டெல்லி சிபிஐ அலுவலகத்தில் சுமார் 8 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து அவரிடம் 2 வது நாளாக இன்றும் தீவிர விசாரணை நடைபெற்றது. இரண்டு நாள் விசாரணையில் நூற்றுக்கணக்கான கேள்விக் கணைகளை சிபிஐ அதிகாரிகளிடமிருந்து எதிர்கொண்ட தயாநிதிமாறன் பின்னர் செய்தியாளர்களிடம் இதுகுறித்து பேசும்போது, சிபிஐ விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்ததாகக் கூறினார்.
தான் பயன்படுத்தியது ஒரு தொலைபேசி இணைப்புதான் என்றும், 300 இணைப்புகள் அல்ல என்பதற்கான ஆதாரங்களை சிபிஐயிடம் வழங்கியதாகவும் தயாநிதிமாறன் தெரிவித்தார்.