டிடிவி தினகரனின் குரல் மாதிரியை பதிவு செய்ய டெல்லி நீதிமன்றம் அனுமதி
இரட்டை இலையை பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் சுகேஷ், டிடிவி தினகரன் ஆகியோரின் குரல் மாதிரிகளை பதிவு செய்ய டெல்லி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
டெல்லி: தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் சுகேஷ், டிடிவி தினகரன் ஆகியோர் பேசிய ஆடியோ பதிவுகளின் உண்மைத்தன்மையை ஆராய டெல்லி தீஸ் ஹசாரி நீதிபதி பூனம் சௌதரி அனுமதி அளித்துள்ளார்.
தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை மீண்டும் பெற்றாக வேண்டும் என்ற ஆர்வக் கோளாறு காரணமாக குறுக்கு வழியில் முயற்சித்த டிடிவி தினகரன், டெல்லி இடைத்தரகரை அணுகியது அம்பலமானது. இதைத் தொடர்ந்து இடைத்தரகர் சுகேஷ் சந்திரா, டிடிவி தினகரன், அவரது நண்பர் மல்லி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் சுகேஷும், தினகரனும் வாட்ஸ் ஆப்பில் பேரம் நடத்தியது தொடர்பான ஆடியோ பதிவுகள் அமலாக்கத் துறை, டெல்லி குற்றவியல் போலீஸாரிடம் உள்ளன. இதனிடையே மே 15-ஆம் தேதியுடன் தினகரன், மல்லியின் நீதிமன்றக் காவல் முடிவடைந்த அவர்கள் ஜாமீன் மனுவை தாக்கல் செய்தனர். மேலும் தினகரன், சுகேஷ் ஆகியோரின் குரல் மாதிரியை பதிவு செய்ய அனுமதி கோரும் மனுவும் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தினகரன், மல்லியின் ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் திங்கள்கிழமைக்கு நீதிபதி பூனம் சௌதரி ஒத்தி வைத்த நிலையில் குரல் மாதிரி பதிவு தொடர்பான வழக்கை அவர் விசாரித்தார். குரல் மாதிரிகளை பதிவு செய்வது தொடர்பாக உச்ச நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்றம் ஆகியவற்றுக்கே உத்தரவு பிறப்பிக்க அதிகாரம் உள்ளது.
ஆனால் விசாரணை நீதிமன்றத்துக்கு கிடையாது என்று தினகரனின் வழக்கறிஞர் வாதிட்டார். எனினும் நீதிபதி பூனம் சௌதரி கூறுகையில், ஆடியோ பதிவுகளில் உள்ள குரல்கள் அவர்களுடையது தானா என்பதை ஆராய குரல் மாதிரிகள் எடுக்கப்பட வேண்டும். அதுவும் அவர்கள் இருவருக்கும் அழுத்தம் தரக் கூடாது. அவர்கள் ஆமோதிக்கும் பட்சத்தில் குரல் மாதிரியை பதிவு செய்யலாம் என்று உத்தரவிட்டார்.
தினகரனின் ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் திங்கள்கிழமை நடைபெறவுள்ள நிலையில் குரல் மாதிரிகள் நாளை அல்லது நாளை மறுநாள் பதிவு செய்ய வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது.