கிரண் பேடியால் பாஜகவின் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளதா, இல்லையா?
டெல்லி: கிரண் பேடியை முதல்வர் வேட்பாளராக்கியதன் மூலம் கட்சியின் வாக்கு சதவிகிதம் அதிகரிக்காவிட்டாலும், அது சரியாமல் நின்றுள்ளது என்று பாஜக தெரிவித்துள்ளது.
இது குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் ஜி.வி.எல். நரசிம்ம ராவ் ஒன்இந்தியாவிடம் கூறுகையில்,
பாஜகவின் வாக்கு சதவிகிதத்தை கிரண் பேடி அதிகரிக்கவில்லை. ஆனால் அவரால் வாக்கு சதவிகிதம் சரியாமல் உள்ளது. மக்களை இன்னும் நரேந்திர மோடி தான் கவர்கிறார். மக்கள் மோடிக்காகத் தான் வாக்களிக்க உள்ளனர்.
முதல்வர் வேட்பாளர்
மகாராஷ்டிராவில் நாங்கள் முதல்வர் வேட்பாளரை அறிவிக்கவில்லை. ஆனால் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி தேர்தல் பிரச்சாரத்தை துவங்கியபோது அரவிந்த் கெஜ்ரிவாலும் யாரும் என்ற கேள்வி எழுந்தது. ஆம் ஆத்மி தனது பிரச்சாரத்தை தொடர முடிவு செய்தது. அவ்வாறு நடந்தால் பாஜகவின் வாக்கு வங்கி பாதிக்கும். அதனால் தான் முதல்வர் வேட்பாளரை அறிவித்தோம். கிரண் பேடியை கொண்டு வந்தது வாக்கு சதவிகிதம் சரிவதை தடுக்கத் தான்.
கணிப்புகள்
கிரண் பேடியை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கும் முன்பு பாஜகவுக்கு 3ல் 2 பங்கு பெரும்பான்மை கிடைக்கும் என்று நான் கணித்தேன். தற்போது அதே தான். முதல்வர் வேட்பாளரை அறிவிக்காவிட்டால் பாஜகவுக்கு பிரச்சனை ஏற்பட்டிருக்கும்.
முதல்வர் மற்றும் முதல்வர் வேட்பாளர் பற்றி ஆம் ஆத்மி கட்சி மக்கள் மனதில் சந்தேகங்களை எழுப்பத் தொடங்கியது. இதை உடனே தடுத்து நிறுத்தவே முதல்வர் வேட்பாளரை அறிவிக்க பாஜக முடிவு செய்தது.
பேடியும், உட்கட்சி பூசலும்
பாஜகவில் உட்கட்சி பூசல் என்று பிறர் கூறுவது மிகைப்படுத்தப்பட்டதே தவிர வேறு ஒன்றும் இல்லை. கட்சியை யாரும் வெளிப்படையாகவோ, ரகசியமாகவோ விமர்சிக்கவில்லை. அதனால் இந்த உட்கட்சி பூசலில் அர்த்தம் இல்லை.
பாஜக தேர்தல் பொறுப்புக் குழு மேலிடத்தின் கவனிப்பில் உள்ளது. ஒவ்வொரு வாக்குச்சாவடி மையத்தில் இருந்தும் அனைத்து தகவல்களும் மேலிடத்திற்கு செல்கிறது. அப்படி இருக்கையில் யாராவது சதி செய்ய திட்டமிட்டால் அது உடனே மேலிடத்திற்கு தெரிய வந்துவிடும்.
முகுல் ராய்
திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முகுல் ராய் பாஜகவில் சேர்வதாக தற்போது திட்டம் எதுவும் இல்லை. ராய் பாஜகவில் சேரவில்லை என்று தான் கட்சியினர் தெரிவித்துள்ளனர். திரிணாமூல் காங்கிரஸ் கட்சி பிரச்சனையில் உள்ளது. அதனால் அந்த கட்சியினர் அனைவரும் பாஜகவில் சேரும் நாள் தொலைவில் இல்லை என்றார் ராவ்.