ஓமைகாட்: டெல்லியில் தினமும் 5 பலாத்காரங்கள், 2 கொலைகள், 12 பாலியல் தொல்லை சம்பவங்கள்
டெல்லி: டெல்லியில் தினமும் 5 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள், 12 பெண்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாகுகிறார்கள். மேலும் தினமும் 2 கொலைகள் நடக்கிறது.
தான் ஆட்சிக்கு வந்தால் டெல்லியில் பாலியல் பலாத்காரங்கள் நடப்பதை தடுப்பேன் என்று ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் வாக்குறுதி அளித்தார். அவர் முதல்வராக பதவியேற்ற பிறகும் டெல்லியில் தொடர்ந்து பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடக்கத் தான் செய்கின்றன.
இந்நிலையில் டெல்லி குற்றப்பிரிவு போலீசார் கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் ஏப்ரல் 15ம் தேதி வரை டெல்லியில் எந்தெந்த பகுதிகளில் அதிக குற்றங்கள் நடைபெற்றுள்ளது என்ற விவரத்தை வெளியிட்டுள்ளனர். டெல்லியில் குற்றங்கள் அதிகரித்துள்ளதையடுத்து இந்த விவரத்தை சேகரித்துள்ளனர் போலீசார்.
வசந்த் விஹார்
டெல்லியில் உள்ள வசந்த் விஹாரில் தான் அதிகபட்சமாக 15 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 50 பெண்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாகியுள்ளனர்.
கொலை
டெல்லியில் உள்ள பகுதிகளில் நரேலாவில் அதிகபட்சமாக 5 கொலைகளும், பஜன்புராவில் அதிகபட்சமாக 64 பேரிடம் நகை பறிப்பும் நடந்துள்ளது.
தினமும்
டெல்லியில் தினமும் 5 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள், 12 பெண்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாகுகிறார்கள். மேலும் தினமும் 2 கொலைகள் நடக்கிறது. இது தவிர தினமும் 26க்கும் மேற்பட்டோரை நகைபறிக்கும் நபர்கள் குறி வைக்கிறார்கள்.
போலீஸ் கமிஷனர்
டெல்லியில் குற்றங்கள் அதிகரித்துள்ளதையடுத்து போலீஸ் கமிஷனர் பி.எஸ். பஸ்ஸி குற்றம் அதிகம் நடக்கும் இடங்களை கண்டுபிடித்து அங்கு கூடுதல் போலீசாரை பணியமர்த்த உத்தரவிட்டுள்ளார்.
பெண்கள்
பெண்களுக்கு எதிரான குற்றகங்கள் அதிகம் நடக்கும் இடங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவதுடன் அங்கு கூடுதல் மின்விளக்குகள் பொருத்தப்படும் என்று சட்டம் ஒழுங்கு சிறப்பு கமிஷனர் தீபக் மிஷ்ரா தெரிவித்துள்ளார்.