தடையை நீக்க முடியாது.. ஜாகீர் நாயக் மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி ஹைகோர்ட்
ஜாகீர் நாயக்கின் அமைப்பிற்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை டெல்லி ஐகோர்ட்டு நிராகரித்தது.
டெல்லி: இஸ்லாமிய மதபோதகர் ஜாகீர் நாயக்கின் இஸ்லாமிய ஆய்வு நிறுவனத்துக்கு மத்திய அரசு விதித்த தடையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ஜாகீர் நாயக்கின் ஆய்வு மையத்துக்கு மத்திய அரசு 5 ஆண்டுகாலம் தடை விதித்துள்ளது. சட்டவிரோத நடவடிக்கைகளில் இந்த தொண்டு நிறுவனம் செயல்படுவதாக மத்திய அரசு குற்றம்சாட்டியுள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டம்தான் இத்தடைக்கு ஒப்புதல் அளித்திருந்தது. வெளிநாட்டில் இருந்து நிதி உதவி பெறும் ஜாகீர் நாயக், இளைஞர்களை பயங்கரவாத செயல்களில் ஈடுபடுமாறு தூண்டுகிறார் என்பதும் அவர் மீதான குற்றச்சாட்டு.
வங்கதேசத்தின் தலைநகர் டாக்காவில் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட தீவிரவாதிகளில் ஒருவர் தாம் ஜாகீர் நாயக்கின் பேச்சால் ஈர்க்கப்பட்டே இத்தகைய செயலில் ஈடுபட்டதாக கூறியிருந்தார். இதையடுத்து ஜாகீர் நாயக்கின் இஸ்லாமிய ஆய்வு மையத்துக்கு மத்திய உள்துறை அமைச்சகம் தடை விதித்தது. இதை எதிர்த்து ஜாகீர் நாயக் சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் அந்த மனு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தேசப் பாதுகாப்பு நலன் கருதியே மத்திய அரசு ஜாகீர் நாயக் நிறுவனத்துக்கு தடை விதித்துள்ளது என்று கூறி டெல்லி உயர் நீதிமன்றம் அவரது மனுவை தள்ளுபடி செய்தது.