யோகா தின கொண்டாட்டம்: டெல்லியில் 'லண்டன் ஸ்டைல்' தாக்குதல் நடக்கலாம் என எச்சரிக்கை!
டெல்லியில் சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தை சீர்குலைக்கும் வகையில் லண்டன் ஸ்டைல் தாக்குதல் நடக்கலாம் என உளவுத்துறை எச்சரித்துள்ளது.
டெல்லி: நாடு முழுவதும் கொண்டாடப்படும் யோகா தின கொண்டாட்டத்தை சீர்குலைக்க தலைநகர் டெல்லியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தப்படலாம் என்று உளவுத்துறை எச்சரிக்கை விடப்பட்டதால் போலீஸ் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சர்வதேச யோகா தினத்தை பாஜக அரசு வெகு விமரிசையாக கொண்டாடி வருகிறது. லக்னோவில் நடைபெற்ற யோகா தின கொண்டாடத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.
இதே போன்று பல்வேறு மாநிலங்களில் நடைபெறும் யோகா தின நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்கிறார்கள். இந்நிலையில் டெல்லியில் உள்ள கன்னோட் பிளேஸ் என்ற இடத்தை குறி வைத்து லண்டனில் நடைபெற்றது போன்ற தீவிரவாத தாக்குதல் நடத்தப்படலாம் உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்தத் தகவலை உளவுத்துறையினர் டெல்லி போலீசாருக்கு தெரியப்படுத்தி எச்சரித்தனர்.
எச்சரிக்கை
இதனால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லி போலீசார் அந்த பகுதியில் பலத்த கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வாகனங்கள் உள்ளே செல்லாத வகையில் அந்த சாலையில் முகப்புப் பகுதியிலேயே பேரிகார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
கண்காணிப்பு தீவிரம்
மேலும் டெல்லி கன்னோட் பிளேஸில் நடைபெற்ற யோகா தின கொண்டாட்டத்தில் மத்திய அமைச்சர்கள் வெங்கய்ய நாயுடு, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதனால் அசம்பாவிதங்களை தவிர்க்க அந்தப் பகுதியில் தடுப்புகள் அமைத்து வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன.
வேனை மோதி தாக்குதல்
லண்டனில் அண்மையில் நடந்த தாக்குதலில் ஃபின்ஸ்பரி பார்க் மசூதி வாசலில் தொழுகை முடித்து வந்தவர்கள் மீது வேன் ஒன்று மோதி நடத்திய தீவிரவாத தாக்குதலில் 11 பேர் காயமடைந்தனர். இதே போன்ற தாக்குதல் டெல்லியில் நடைபெறும் என்ற எச்சரிக்கை விடப்பட்டது.
3 அடுக்கு பாதுகாப்பு
இதனால் இன்று காலையில் பிரிட்டிஷ் கால வணிக மையமான கன்னோட் பிளேஸில் 10 ஆயிரம் பேர் கூடி யோகா செய்தனர். தீவிரவாத தாக்குதல் நடைபெறாமல் தடுக்க 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்ததாக மூத்த போலீஸ் அதிகாரி கூறியுள்ளார்.
தொடர் கண்காணிப்பு
காலையில் நடைபெற்ற நிகழ்ச்சி மட்டுமின்றி, மேலும் சில இடங்களிலும் யோகா நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் தொடர்ந்து போலீசார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளதகா கூறப்படுகிறது.