'வியாபம்' ஊழல் .. பத்திரிகையாளர் அக்சய்சிங் உடலுறுப்புகளை எய்ம்ஸ்-ல் பரிசோதிக்க கோரிக்கை!
போபால்: மத்திய பிரதேசத்தை கிடுகிடுக்க வைத்துள்ள வியாபம் ஊழல் தொடர்பாக செய்தி சேகரித்த போது மர்மமான முறையில் மரணமடைந்த பத்திரிகையாளர் அக்சய்சிங் குடல் உள்ளிட்ட உடலுறுப்புகளை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பரிசோதிக்க வேண்டும் என்று அவரது சகோதரி வலியுறுத்தியுள்ளார்.
ஆசியாவின் மிகப் பெரிய ஊழலாக விமர்சிக்கப்பட்டு வருகிறது மத்திய பிரதேசத்தின் 'வியாபம்' ஊழல்.. மத்திய பிரதேசத்தில் அரசு பணிக்கான தேர்வு வாரியமான வியாபத்தில் முறைகேடாக நியமனங்கள் நடைபெற்றதாக சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுமார் 700 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக மத்திய பிரதேச மாநில உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் புதிய திருப்பமாக வழக்கில் தொடர்புடைய 47 பேர் இதுவரை மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர்.
அதே நேரத்தில் மத்திய பிரதேச ஆளும் பாரதிய ஜனதா அரசின் முதல்வரான சவுகானோ, சாதாரண மரணங்கள் பெரிதாக்கப்படுகின்றன எனக் கூறி வருகிறார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக இந்தியா டுடே குழுமத்தின் செய்தியாளர் அக்சய்சிங், வியாபம் தொடர்பாக செய்தி சேகரித்திருந்தார். ஆனால் திடீரென அவர் வாயில் நுரைதள்ளிய நிலையில் மரணமடைந்தார்.
நாடு முழுவதும் இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து அக்சய்சிங்கின் குடல் உள்ளிட்ட உடல் உறுப்புகளை மத்திய பிரதேசம் அல்லாமல் வேறு ஒரு மாநிலத்தில் குறிப்பாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பரிசோதிக்க வேண்டும் என்று அவரது சகோதரி மற்றும் இந்தியா டுடே குழுமம் வலியுறுத்தி உள்ளது.