ரூ 17 லட்சம் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்.. ஹைதராபாத்தில் சிபிஐ அதிரடி ரெய்டு
ஹைதராபத்தில் 11 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் சிபிஐ அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ 17 லட்சம் மதிப்புள்ள புதிய 2000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நடவடிக்கையாக நவம்பர் 8 ஆம் தேதி முதல் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. அதற்கு பதிலாக புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்திய மத்திய அரசு, பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகள் மற்றும் அஞ்சலகங்களில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்றும் தெரிவித்தது.
இதையடுத்து நாடு முழுவதும் உள்ள வங்கிகள் மற்றும் அஞ்சலகங்களில் மக்கள் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றினர். இதனிடையே பணப் பதுக்கல் தொடர்பாக நாடு முழுவதும் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நேற்று 11 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 17 லட்சம் மதிப்புள்ள புதிய 2000 ரூபாய் நோட்டுக்கள் மற்றும் பல்வேறு முக்கிய ஆவணங்கள், லேப்டாப்கள், செல்போன்கள், கைப்பற்றப்பட்டுள்ளன. இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.