பூதாகரமாகும் ரூபாய் நோட்டு விவகாரம்... நாடாளுமன்றம் 14வது நாளாக முடங்கியது
ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக 14வது நாளாக இன்றும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடக்கப்பட்டன.
டெல்லி: ரூபாய் நோட்டு செல்லாது விவகாரம் பூதாரமாகி வருகிறது. இந்தப் பிரச்சனை குறித்து விவாதிக்க வேண்டும் என்று கோரி காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் 14வது நாளாக இன்றும் நாடாளுமன்றத்தில் இரு அவைகளும் முடக்கப்பட்டன.
கடந்த 16ம் தேதி நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்கியது. தொடங்கிய நாள் முதல் ரூபாய் நோட்டு செல்லாது குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இது தவிர நாடாளுமன்றத்திற்கும் வெளியிலும் போராட்டம், ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றன.
குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்கிய 13 நாட்களில் ஒரு நாள் மட்டுமே ராஜ்ய சபாவிற்கு பிரதமர் மோடி வந்தார். அதே போன்று லோக் சபாவிற்கு ஒரு நாள் வந்தார். அவ்வளவுதான். மோடி அவைக்கு வந்து விவாதத்தில் பங்கேற்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்பிக்கள் வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டு வரும் நிலையில், மோடியின் இந்தப் போக்கை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன. மேலும், எதிர்க்கட்சிகளை தவறாக விமர்சனம் செய்து வரும் மோடியை கண்டித்தும் எதிர்க்கட்சி எம்பிக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று 11 மணிக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூடின. அவை தொடங்கிய சில நிமிடங்களில் ரூபாய் நோட்டு செல்லாது விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்பிக்கள் கோஷங்களை எழுப்பி அவையின் மையப் பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டனர். மேலும், எதிர்க்கட்சிகள் குறித்து தவறாக பேசி வரும் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் கோரின.
இதனால் இரு அவைகளிலும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டு அவைகளை தொடர்ந்து நடத்த முடியாத சூழல் உருவானது. இதனையடுத்து, ராஜ்ய சபா மற்றும் லோக் சபா ஆகிய 2 அவைகளும் 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.