மேற்கு வங்கத்தில் பரவும் டெங்கு.. 5,639 பேர் பாதிப்பு... பலி எண்ணிக்கை 23-ஆக உயர்வு!
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் டெங்கு காய்ச்சலால் 5000-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், டெங்கு காய்சலால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23-ஆக உயர்ந்துள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 65 வயதுமிக்க பெண்மணி நேற்று உயிரிழந்தார். தெற்கு பர்கனாஸ் பகுதியை சேர்ந்த அந்த பெண்மணி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிசிக்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இதனால், மேற்கு வங்க மாநிலம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு பலியானோர் எண்ணிக்கை 23-ஆக உயர்ந்துள்ளது என்று மாநில மருத்துவ துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மாநிலம் முழுவதும் புதிதாக 510 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேற்கு வங்கத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 5,639 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.