ஒரே நாளில் 30 ஆயிரம் பேருக்கு டெங்கு காய்ச்சல்... கேரளாவில் பயங்கரம்
கேரளாவில் ஒரே நாளில் சுமார் 30 ஆயிரம் பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவனந்தபுரம்: கேரளாவில் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் சுமார் 30 ஆயிரம் பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருவனந்தபுரம், எர்ணாகுளம், மலப்புரம், கோட்டயம், கோழிக்கோடு பகுதிகளில் டெங்கு காய்ச்சலின் பாதிப்பு மிகவும் அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் மத்தியில் பீதி நிலவுகிறது.
இதுவரை டெங்கு காய்ச்சலுக்கு மாநிலம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி விட்டனர். தினமும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு போதுமான படுக்கை வசதி கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. பல அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் தரையில் படுத்து சிகிச்சை பெரும் அவல நிலை உள்ளது.
நேற்று ஒரே நாளில் மட்டும் மாநிலம் முழுவதும் சரியாக 29 ஆயிரத்து 969 பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருவனந்தபுரத்தில் மட்டும் அதிகபட்சமாக 11 ஆயிரம் பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. சுகாதாரத்துறை அதிகாரிகள் வீடு வீடாக சென்று டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் பற்றி கணக்கெடுத்து வருகிறார்கள்.
அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள் 24 மணி நேரமும் பணியில் இருக்கும்படி கேரள மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.