டெல்லியில் 2 அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை மறுக்கப்பட்டதால் பச்சிளம் குழந்தை பலி
டெல்லி: டெல்லியில் உள்ள 2 அரசு மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுத்ததால் குறை பிரசவத்தில் பிறந்த ஆண் குழந்தை பரிதாபமாக இறந்துள்ளது.
டெல்லி புத் விஹாரில் உள்ள மஸ்கான் மருத்துவமனையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் 12 மணிக்கு அறுவை சிகிச்சை மூலம் குறைமாத ஆண் குழந்தை பிறந்தது. 32 வாரங்களே ஆன அந்த குழந்தைக்கு மூச்சுத் திணறல் பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து அதை 48 மணிநேரத்திற்கு வென்ட்டிலேட்டரில் வைக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
நாள் ஒன்றுக்கு வென்ட்டிலேட்டருக்கு ரூ.10 ஆயிரம் செலவாகும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் குழந்தையின் பெற்றோருக்கு வென்ட்டிலேட்டருக்கு செலவு செய்யும் அளவுக்கு பண வசதி இல்லை. இதையடுத்து அவர்கள் குழந்தையை நேற்று மதியம் 12.40 மணிக்கு கன்னாட் பிளேசில் உள்ள அரசு நடத்தும் கலாவதி சரண் குழந்தைகள் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர்.
மருத்துவமனையில் படுக்கை மற்றும் வென்ட்டிலேட்டர் இல்லை என்று கூறி மருத்துவமனை நிர்வாகம் குழந்தைக்கு சிகிச்சை அளிக்க மறுத்துவிட்டது. அதன் பிறகு குழந்தையை மதியம் 1 மணிக்கு மற்றொரு அரசு மருத்துவமனையான ராம் மனோகர் லோஹியா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கும் படுக்கை, வென்ட்டிலேட்டர் இல்லை என்று கூறி குழந்தையை அனுமதிக்க மறுத்துவிட்டனர்.
மதியம் 2.30 மணிக்கு குழந்தையை லோக் நாயக் ஜெய் பிரகாஷ் நாராயண் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்குள்ள மருத்துவர்கள் குழந்தையை பரிசோதனை செய்துவிட்டு அது ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
புத் விஹாரில் வசிக்கும் குழந்தையின் தந்தை தீரஜ் குமார் மாதம் ரூ.4 ஆயிரம் சம்பாதிக்கிறார். அவர் நடந்த சம்பவம் பற்றி கூறுகையில்,
என் குழந்தை இறந்ததற்கு அரசு மருத்துவமனைகளே காரணம். அவர்கள் என் குழந்தையை பரிசோதிக்கக் கூட இல்லை. எதற்காக மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைப் பிரிவு வைத்துள்ளார்கள் என்றார்.