மல்லையா சொத்துக்களை வாங்க ஆளில்லை.. விலையை குறைத்தும் பயனில்லை
மும்பை மற்றும் கோவாவில் உள்ள மல்லையாவுக்குச் சொந்தமான இல்லங்களின் விலையில் 10 சதவீதம் விலைக்குறைக்கப்பட்டும் நேற்ற நடத்தப்பட்ட மறுஏலம் தோல்வியடைந்தது.
மும்பை: வங்கிகளில் மல்லையா பெற்ற கடனை திரும்ப பெறுவதற்காக அவரது சொத்துகள் 10 சதவீதம் விலை குறைக்கப்பட்டும் அவற்றை யாரும் வாங்க முன்வராததால் இந்த மறுஏலமும் தோல்வியிலேயே முடிந்தது. இதனால் வங்கிகள் விழிப்பிதுங்கி உள்ளன.
கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை நடத்தி வந்தவர் விஜய் மல்லையா. அவர் பாரத ஸ்டேட் வங்கி, ஆக்சிஸ் வங்கி உள்ளிட்ட வங்கிகளிலிருந்து ரூ.9,000 கோடியை கடனாகப் பெற்றுக் கொண்டு லண்டனில் தலைமறைவாக உள்ளார்.
அந்த கடனை வசூல் செய்வதற்காக அவரது சொத்துக்களை கடன் கொடுத்தோர் கூட்டமைப்பு (எஸ்.பி.ஐ.கேப்ஸ் நிறுவனம் ) மூலம் ஏலத்திற்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டன. அதன்படி மும்பையில் உள்ள கிங்ஃபிஷர் இல்லம் மற்றும் கோவாவில் உள்ள கிங்ஃபிஷர் வில்லா ஆகியவற்றை கடந்த 24-ஆம் தேதி ஏலத்துக்கு அறிவிக்கப்பட்டது.
கடந்த 3 முறை ஏலத்திற்கு வந்தபோதும் அதிக விலை கேட்கப்பட்டதால் இவற்றை யாரும் ஏலம் எடுக்க முன்வரவில்லை. இதனால் அந்த சொத்துகளின் மதிப்பில் 10 சதவீதத்தை குறைத்து நேற்று மீண்டும் ஏலத்துக்கு வந்தன
இதில் மும்பை கிங்பிஷர் ஹவுஸ் ரூ.103.5 கோடி விலை நிர்ணயிக்கப்பட்டு 4-வது முறையாகவும், கோவா வில்லா பங்களா வீடு ரூ.73 கோடி என விலை நிர்ணயிக்கப்பட்டு 3-வது முறையாகவும் நேற்று மீண்டும் ஏலம் விடப்பட்டன. இந்த அளவுக்கு விலை குறைக்கப்பட்ட போதும் அவற்றை ஏலம் எடுக்க யாரும் முன்வரவில்லை.
இதன் காரணமாக விஜய் மல்லையாவின் வீடுகளை ஏலத்திற்கு விடும் வங்கி கூட்டமைப்புகளின் முயற்சி மீண்டும் தோல்வியை சந்தித்துள்ளது. இதனால் செய்வதறியாமல் வங்கி அதிகாரிகள் விழிபிதுங்கியுள்ளனர்.