ஜனாதிபதி தேர்தல்: எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் மீராகுமாருக்கு தேவே கவுடா திடீர் ஆதரவு
ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் மீராகுமாரை ஆதரிப்பதாக மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவர் தேவே கவுடா திடீரென அறிவித்துள்ளார்.
பெங்களூரு: ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளரான மீராகுமாருக்கு மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆதரவு அளிக்கும் என முன்னாள் பிரதமர் தேவே கவுடா அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் பாஜக, பீகார் ஆளுநராக இருந்த ராம்நாத் கோவிந்தை நிறுத்தியது. இதையடுத்து 17 எதிர்க்கட்சிகள் காங்கிரஸ் தலைமையில் ஒன்று திரண்டு ஆலோசனை நடத்தின.
மீராகுமார் வேட்பாளர்
இக்கூட்டத்தில் லோக்சபா முன்னாள் சபாநாயகர் மீராகுமார், எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவருக்கும் கணிசமான ஆதரவு இருந்து வருகிறது.
தமிழக கட்சிகள் நிலைமை
தமிழகத்தைப் பொறுத்தவரையில் அதிமுகவின் கோஷ்டிகள் அனைத்தும் பாஜகவின் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. திமுக- காங்கிரஸ் மீராகுமாரை ஆதரித்துள்ளன.
தேவே கவுடா ஆதரவு
இதனிடையே 40 எம்.எல்.ஏ,க்களையும் 3 எம்.பிக்களையும் கொண்டுள்ள மதச்சார்பற்ற ஜனதா தளம் தம்முடைய ஆதரவை மீராகுமாருக்கு தெரிவித்துள்ளது. அக்கட்சியின் தலைவரான முன்னாள் பிரதமர் தேவே கவுடா இதை அறிவித்துள்ளார்.
அது போனவாரம்
கர்நாடகா சட்டசபையில் கடந்த வாரம் சபாநாயகர் சங்கரமூர்த்திக்கு எதிராக பாஜக தீர்மானம் கொண்டுவந்தது. இத்தீர்மானத்தை மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியானது ஆதரித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.