மகாராஷ்டிராவின் முதல் பாஜக முதல்வராக பதவியேற்றார் தேவேந்திர பட்னாவிஸ்
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல் பாஜக முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்றுக் கொண்டார். மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த பிரமாண்ட பதவியேற்பு விழாவில் 9 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.
பாஜக-சிவசேனா இடையேயான 25 ஆண்டுகால கூட்டடணி, மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் போது முறிந்தது. இதனைத்தொடர்ந்து இரு கட்சிகளும் தனித்து போட்டியிட்டன. இதேபோல் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் இடையேயான கூட்டணியும் தேர்தலின் போது முறிந்தது. இந்த கட்சிகளும் தனித்து போட்டியிட்டன. நான்கு முனை போட்டி நிலவியதால் யார் ஆட்சியைப் பிடிப்பார்கள் என்ற பரபரப்பான சூழலில், தேர்தல் முடிவுகள் வெளியான போது பாரதிய ஜனதா கட்சி மொத்தம் உள்ள 288 இடங்களில் 123 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.
ஆட்சியமைக்க 145 இடங்கள் தேவை என்ற நிலையில், பாஜக வசப்படுத்திய இடங்களில் எண்ணிக்கை 123தான் என்பதால் பிற கட்சியின் ஆதரவை எதிர்பார்த்தது பாஜக. ஆனால், துணை முதல்வர் பதவி, முக்கிய இலாக்காக்களுடன் கூடிய அமைச்சர் பதவிகளை தங்களுக்கு அளித்தால் ஆட்சிக்கு ஆதரவு அளிக்க தயார் என்று சிவசேனா கெடுபிடி செய்தது. இதனால் சிவசேனாவை ஒதுக்கியே வைக்க பாஜக திட்டமிட்டது.
இந்த நேரத்தில்தான் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து பிரிந்து 41 தொகுதிகளை வென்றுள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சி, பாஜகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வெளியில் இருந்து அளிக்க தயார் என்றது. இதனால் சிவசேனா நிலை மேலும் சிக்கலானது.
இதனிடையே மகாராஷ்டிரா பாஜக சட்டப்பேரவை கட்சி தலைவராக அதாவது முதல்வராக தேவேந்திர பட்னாவிசை அக்கட்சி எம்.எல்.ஏக்கள் தேர்ந்தெடுத்தனர். இதைத்தொடர்ந்து, எந்த கட்சியின் ஆதரவையும் கோராமல் தனித்தே ஆட்சியமைக்க பாஜக முடிவு செய்தது. சட்டசபையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்கும்வரை மைனாரிட்டியாகவே ஆட்சியை தொடர பாஜக முடிவு செய்தது. இதையடுத்து மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு புதிய அரசு பதவியேற்பு விழா நடந்தது.
மராட்டிய ஆளுநர் வித்தியாசாகர் ராவ் முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். முதலில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்றார். அவர் கடவுளின் பெயரால் பதவி பிரமாணம் செய்து கொண்டார். மகாராஷ்டிர மாநில வரலாற்றில் இவர்தான் முதலாவது பாஜக முதல்வராகும். மொத்தத்தில் தேவேந்திர பட்னாவிஸ் அம்மாநிலத்தின் 27வது முதல்வராகும்.
இதையடுத்து 7 அமைச்சர்களும், 2 இணை அமைச்சர்களும் பதவியேற்றனர். முதல்வரோடு சேர்த்து பத்து பேர் கொண்ட சிறிய அமைச்சரவை முதல்கட்டமாக அமைக்கப்பட்டுள்ளது. கூட்டணி இறுதி செய்தபிறகு அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
அமைச்சர்களாக பதவியேற்றவர்களில், ஏக்நாத் கட்சே, சுதிர் முன்கான்திவார், தவ்டே வினோத், பிரகாஷ் மேத்தா, சந்திரகாந்த் பாட்டீல், விபத்தில் மரணமடைந்த முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான கோபிநாத் முண்டேவின் மகள் பங்கஜாமுண்டே, விஷ்ணு சவ்ரா ஆகியோர் கேபினெட் அந்தஸ்து கொண்ட அமைச்சர்களாகும். திலிப் காம்ப்ளி, வித்யா தாக்கூர் ஆகிய இருவரும் இணை அமைச்சர்களாகும்.
பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திரமோடி, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, மூத்த தலைவர் அத்வானி, கோவா, குஜராத் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் கலந்து கொண்டனர். இதேபோல தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் சரத்பவார், பிரபுல் பட்டேல், சிவசேனா தலைவர் உத்தவ்தாக்ரே, பாலிவுட் பிரபலங்கள் விவேக் ஓபராய், ஆஷா போஸ்லே உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் விழாவில் பங்கேற்றனர்.