ஐஎஸ்ஐஎஸ் மீது அனைவர் கவனமும் இருந்தபோது அலேக்காக இந்தியாவில் ஊடுருவிய அல்கொய்தா
டெல்லி: ஒட்டுமொத்த இந்திய பாதுகாப்பு துறையும், ஐஎஸ்ஐஎஸ் நடவடிக்கை மீது கண் வைத்திருந்தபோது, அல்கொய்தா நாட்டுக்குள் ஊடுருவ தொடங்கியுள்ள விவகாரம், சமீபத்திய சில தீவிரவாதிகளின் கைது மூலம் உறுதியாகியுள்ளது.
நாட்டின் பல பகுதிகளில், நேற்று முதல் இன்று வரை 3 அல்கொய்தா தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது பாதுகாப்புத்துறையை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. விசாரணையை மேற்கொண்டுள்ள டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவை சேர்ந்த அதிகாரி ஒருவர் 'ஒன்இந்தியாவிடம்' கூறுகையில், ஆந்திரா, மகாராஷ்டிரா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் சதிகளை அரங்கேற்ற அல்கொய்தா திட்டமிட்டுள்ளது.
கைதான நபர்கள் தரும் மேலதிக தகவல்கள் விசாரணையில் திருப்பம் தரும். டெல்லி மெட்ரோ ரயில் நிலையம், இந்து கோயில்கள் போன்றவற்றில் தாக்குதல் நடத்துவது இவர்கள் நோக்கம்.
ஐஎஸ்ஐஎஸ் மீதான கவனத்தில் ஒட்டுமொத்த பாதுகாப்பு துறையும், இருந்தபோது, அல்கொய்தா இந்தியாவிற்குள் ஊடுருவும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது அம்பலமாகியுள்ளது., மூளைச்சலவைக்கு உள்ளாகியுள்ள இந்திய இளைஞர்களை கொண்டு பயங்கரவாத செயல்களை செயல்படுத்த அல்கொய்தா திட்டமிட்டுள்ளது.
இந்திய துணைக்கண்டத்தில் அல்கொய்தா உருவாக்கப்படும் என்று ஏற்கனவே வந்த அறிவிப்புக்கு, இந்திய முஸ்லிம் அமைப்புகள் கண்டனம் தெரிவித்திருந்தன. எனவே, மூளைச்சலவைக்கு இளைஞர்கள் பலரை உட்படுத்த முடியுமா என்று சந்தேகம் உள்ளது.
வங்கதேசம் வழியாக, இந்தியாவின் மேற்கு வங்கத்திற்குள் ஊடுருவி நாட்டுக்குள் நாசவேலைகளை நடத்துவது அல்கொய்தா திட்டம். இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.