உள்துறை செயலர் பதவியில் இருந்து ரிடையர்டு ஆபீசர் பணிக்கு தூக்கியடிக்கப்பட்ட கோயல்!!
டெல்லி: நாட்டின் மிக முக்கியமான உள்துறை செயலர் பதவியில் இருந்த எல்.சி. கோயல் திடீரென ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்கு ஒதுக்கப்படும் பணிக்கு இடம்மாற்றம் செய்யப்பட்டது அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் தாம் விருப்ப ஓய்வில் செல்வதாக கோயல் தெரிவித்துவிட்டார்.
மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் அமர்ந்தது முதலே வெளியுறவுத் துறை, உள்துறை ஆகிய நாட்டின் உயர் பதவிகளில் நிரந்தரமாக எவரும் நீடிப்பதில்லை என்ற நிலையே தொடர்கிறது. வெளியுறவுத் துறை செயலராக இருந்த சுஜாதாசிங் அவர் பணிக்காலம் முடிவதற்கு முன்னரே அப்பொறுப்பில் இருந்து விலக நேரிட்டது.
இதேபோல் உள்துறை செயலராக இருந்த அனில் கோஸ்வாமி, சாரதா சிட் பண்ட் மோசடி வழக்கில் தலையிட்டார் எனக் கூறி பதவி விலக கோரப்பட்டார். தற்போது 6 மாதங்கள் கூட பதவி வகிக்காத நிலையில் எல்.சி. கோயலும் உள்துறை செயலர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார்.
இது தொடர்பாக டெல்லி வட்டாரங்கள் கூறுகையில், உள்துறை செயலர் பதவியில் இருந்த கோயல், சட்ட விதிகளை முழுமையாக கடைபிடித்தாக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தது உள்துறை அமைச்சகத்தில் இருந்த சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக சன் டிவி குழுமத்துக்கு பாதுகாப்பு அனுமதி சான்றிதழ் வழங்கக் கூடாது என்பதில் விடாப்பிடியாக இருந்திருக்கிறார் கோயல்.
ஆனால் ஒலிபரப்புத் துறை அமைச்சகமோ கோயலின் இந்த நிலைப்பாட்டுக்கு மிக கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருந்ததாம். இதேபோல் பிரதமர் அலுவலகமே தன்னிச்சையாக நாகா அமைதி ஒப்பந்த நடவடிக்கைகளை மேற்கொண்ட போது கோயல் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். மத்திய அரசுடன் தொடர் மோதல் போக்கை கடைபிடித்த நிலையில் திங்கள்கிழமையன்று திடீரென தாம் விருப்ப ஓய்வில் செல்வதாக மத்திய அரசிடம் கோயல் தெரிவித்திருக்கிறார். அவரது பதவிக் காலம் இன்னும் 17 மாதங்கள் இருக்கின்றன.
மத்திய அரசும் உடனேயே ராஜிவ் மெஹ்ரிஷியை, உள்துறை செயலராக நியமித்து அறிவித்தது. அதன் பின்னர் கோயலை ஓய்வு பெற்ற அதிகாரிகள் பொறுப்பு வகிக்கிற தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் இருக்கும் இண்டியன் டிரேட் புரமோஷன் அமைப்பின் தலைவராக நியமித்திருப்பதாக அறிவித்தது. ஆனாலும் தாம் விருப்ப ஓய்வில் செல்வதாக கோயல் தெரிவித்துவிட்டார்.
இந்த பதவியை தற்போது கூடுதல் செயலர் நிலையில் உள்ள அதிகாரிதான் கவனித்து வருகிறார்.
உள்துறை செயலர் என்ற முக்கிய பொறுப்பில் இருந்து விட்டு கூடுதல் செயலர் ரேஞ்சில் உள்ள ஒரு பதவிக்கு தம்மை மத்திய அரசு நியமித்திருப்பதால் கொந்தளித்துப் போயுள்ளாராம் கோயல்.. அதே நேரத்தில் மத்திய அரசு இப்படி உயர் பொறுப்பில் உள்ள அதிகாரிகளை பந்தாடுவது என்பது அரசு நிர்வாகத்தில் தேவையற்ற தேக்க நிலையை உருவாக்கும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்