முன்னுக்கு பின் முரணாக சொத்து மதிப்பை குறைத்து காட்டிய சசிகலா.. உச்சநீதிமன்றம் கிடுக்கிப்பிடி
டெல்லி: சொத்து குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் கர்நாடக உயர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து கர்நாடக அரசு மற்றும் திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் ஆகியோர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு, நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை நடந்து வருகிறது. கடந்த பிப்ரவரி 23ம் தேதி முதல் இறுதி வாதம் நடந்து வருகிறது. கர்நாடகா தரப்பில் மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே 4 நாட்களும், அரசு மூத்த வழக்கறிஞர் ஆச்சார்யா 5 நாட்களும் வாதத்தை முன்வைத்தனர்.
ஜெயலலிதா தரப்பில் மூத்த வக்கீல் நாகேஸ்வர ராவ் 4 நாட்கள் வாதிட்டார். கடந்த மாதம், 27ம் தேதி சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் சார்பில் மூத்த வக்கீல் சேகர் நாப்டே 4வது நாளாக தனது வாதத்தை முன்வைத்தார். இதை தொடர்நது வழக்கு மே 3ம் தேதிக்கு (நேற்றைக்கு) ஒத்திவைக்கப்பட்டது.
நேற்று கோர்ட் ஆரம்பித்ததும், சிறிது நேரம், சேகர் நாப்டே வாதம் முன் வைத்தார். இதை தொடர்ந்து, கர்நாடக தரப்பில் வழக்கறிஞர் பி.வி.ஆச்சாரியா 2வது சுற்று, பதில் வாதத்தை முன்வைத்தார்.
ஜெயலலிதா தரப்பு வாதம் நிலைக்காது, சொத்து குவிப்பு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணமாகியுள்ளது என்று ஆச்சாரியா வாதம் முன் வைத்தார். 2வது நாளாக இன்றும், ஆச்சாரியா வாதத்தை தொடர்ந்தார். அப்போது, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் ரூ.66 லட்சம் என சசிகலா தரப்பு தகவல் தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் சொத்து மதிப்பை ரூ.13 லட்சம் என குறைத்து காட்டியுள்ளனர் என்று ஆச்சார்யா குற்றம்சாட்டினார்.
இதையடுத்து முரண்பட்ட தகவலை கூறியது ஏன் என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.