கழிப்பறை இல்லாத வீட்டில் வாழ மாட்டேன்: விவாகரத்து கோரும் பீகார் பெண்
பாட்னா: வீட்டில் கழிப்பறை இல்லாததால் பீகாரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற முடிவு செய்து வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுனிதா தேவி(25). அவருக்கும் அதே மாவட்டத்தில் உள்ள பஹர்பூர்-பிஷென்பூர் பஞ்சாயத்தைச் சேர்ந்த காய்கறி வியாபாரி தீரஜ் சவுதரிக்கும் கடந்த 2011ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. சுனிதா, நீரஜ் தம்பதிக்கு குழந்தை இல்லை. சுனிதா தனது கணவர், மாமனார், மாமியார் ஆகியோருடன் இரண்டு அறைகள் உள்ள வீட்டில் வசித்து வந்தார்.
திருமணம் முடிந்த நாளில் இருந்து வீட்டில் ஒரு கழிப்பறை கட்டிக் கொடுக்குமாறு சுனிதா தனது கணவரை கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால் அவர் ஏதாவது காரணம் கூறி கழிப்பறையை கட்டாமல் இருந்துள்ளார். பொறுத்துப் பொறுத்துப் பார்த்த சுனிதா கணவரை விட்டுப் பிரிந்து தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். அவர் தீரஜை விவாகரத்து செய்யவும் முடிவு செய்துள்ளார்.
இது குறித்து சுனிதாவின் கணவர் கூறுகையில்,
ஆமாம், என் மனைவி கழிப்பறை கட்டிக் கொடுக்குமாறு பல முறை கேட்டார். ஆனால் கழிப்பறை கட்ட என்னிடம் பணம் இல்லை. என் தந்தை வேறு அண்மையில் இறந்துவிட்டார். அதனால் நான் சம்பாதிப்பதை வைத்து தான் குடும்பத்தை நடத்துகிறேன் என்றார்.