இரு முனைத் தாக்குதலில் ஜெ... விடுதலையை எதிர்த்து திமுகவும் அப்பீல் செய்தது!
டெல்லி: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தி.மு.க. மேல்முறையீடு செய்துள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோரை விடுதலை செய்து கடந்த மே 11-ந் தேதியன்று கர்நாடகா உயர்நீதிமன்ற தனி பெஞ்ச் நீதிபதி குமாரசாமி தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடகா அரசு உச்சநீதிமன்றத்தில் ஏற்கெனவே மேல்முறையீடு செய்துள்ளது.
இந்த நிலையில் தி.மு.க. பொதுச்செயலர் அன்பழகன் இன்று ஜெயலலிதா உள்ளிட்டோர் விடுதலை செய்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
திமுக மும்முரம்
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கை கர்நாடகாவுக்கு மாற்ற காரணமாக இருந்தவர் க. அன்பழகன். இவரையும் இந்த வழக்கில் ஒருதரப்பாக சேர்த்துக் கொள்ள உச்சநீதிமன்றம் அனுமதித்த நிலையில் இந்த மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் நடந்த தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இந்த அப்பீல் மனுவை தாக்கல் செய்ய முடிவு எடுக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து மேல் முறையீடு செய்வதற்கான மனுவை தி.மு.க. வழக்கறிஞர்கள் தயாரித்தனர். பிறகு அவர்கள் மேல்முறையீட்டு மனுவில் இடம் பெற்றுள்ள அம்சங்கள் பற்றி தி.மு.க. தலைவர் கருணாநிதி மற்றும் பெருளாளர் மு.க.ஸ்டாலினிடம் விளக்கிக் கூறினார்கள்.
உச்சநீதிமன்றத்தில் அப்பீல்
இதனைத் தொடர்ந்து தி.மு.க பொதுச்செயலாளர் க.அன்பழகன் சார்பில் வழக்கறிஞர் வி.ஜி.பிரகாசம், உச்ச நீதிமன்ற பதிவாளரிடம் 2 மனுக்களை இன்று தாக்கல் செய்திருக்கிறார்.
2 மனுக்கள்
சொத்து குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் விடுதலை செய்யப்பட்டதற்கு தடை விதிக்க வேண்டும்; இந்த வழக்கில் இருந்து 7 பினாமி நிறுவனங்கள் விடுதலை செய்யப்பட்டது தவறு எனக் கோரி இந்த 2 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
மனுவில் இருப்பது என்ன?
இந்த மனுவில் கர்நாடகா உயர்நீதிமன்ற தனி பெஞ்ச் நீதிபதி குமாரசாமி, உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களை கடைபிடிக்காமல் தீர்ப்பு வழங்கியிருப்பதாகவும், தீர்ப்பில் நிறைய கணிதப் பிழைகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குமாரசாமி கணக்குப் பிழை
மேலும் கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்பில் இருந்த கணிதப் பிழைகள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. ஜெயலலிதா தரப்பினர் பெற்ற கடன் 24,17,31,274 ரூபாய் என்று நீதிபதி குமாரசாமி தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் அவரே பட்டியலிட்ட பத்து கடன்தொகையை கூட்டினால், அதன் கூட்டுத் தொகை 10,67,31,274 ரூபாய்தான் வரும். இதன்படி ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சேர்த்த சொத்தின் மதிப்பு 76.7% வரும் எனவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
அக்னிகோத்ரி தீர்ப்பு
அதேபோல் அக்னி கோத்ரியின் தீர்ப்பை அடிப்படையாக கொண்டுதான் ஜெயலலிதா விடுவிக்கப்பட்டிருப்பதாகவும், ஆனால் அந்த தீர்ப்பை பெங்களூரு உயர்நீதிமன்றம் தவறாகப் புரிந்து கொண்டிருப்பதாகவும் அன்பழகன் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 நிறுவனங்கள் மீது விசாரணை
மேலும் பினாமி நிறுவனங்களான லெக்ஸ் பிராப்பர்ட்டீஸ் உள்ளிட்ட 7 நிறுவனங்களின் சொத்துகள் குறித்து மீண்டும் விசாரிக்க வேண்டும் என்றும் இம் மனுவில் கோரப்பட்டுள்ளது.