சத்தீஸ்கரில் பயங்கரம்.. டாக்டர் தம்பதி கல்லால் அடித்துக் கொலை.. பொது மக்கள் அதிர்ச்சி!
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் டாக்டர் தம்பதி கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் கவார்தா மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதி கணேஷ் சூர்யவன்ஷி- உஷா. இருவரும் மருத்துவர்கள். இந்நிலையில் இருவரும் கடந்த 3 நாட்களாக பணிக்கு செல்லவில்லை. வீடும் பூட்டிய நிலையிலேயே இருந்துள்ளது. இதையடுத்து சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்ததில் மருத்துவர்கள் இருவரும் பிணமாக கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அவர்களுக்கு அருகில் ஏராளமான கற்கள் தரையில் கிடந்தன. இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் மருத்துவர்கள் இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மருத்துவ தம்பதியரின் மரணம் தொடர்பாக அடையாளம் தெரியாத நபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கொலைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.