சிகிச்சைக்கு வந்த கல்லூரி மாணவி பலாத்காரம் - அரசு மருத்துவர் சஸ்பெண்ட்: 2 போலீசார் கைது
ராய்ப்பூர்: சட்டீஸ்கரில் சிகிச்சைக்கு வந்த மாணவியைப் பலாத்காரம் செய்த அரசு மருத்துவமனை மருத்துவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
சட்டீஸ்கர் மாநிலத்தில் உள்ள துர்க் மாவட்டத்தில் சுமேலாவில் உள்ளது லால் பகதூர் சாஸ்திரி அரசு மருத்துவமனை. இங்கு மருத்துவராக பணியாற்றி வரும் கௌதம் பண்டிட் என்பவர் கடந்த ஜூன் 19ம் தேதி சிகிச்சைக்காக வந்த கல்லூரி மாணவியைப் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவி கடந்த புதன் கிழமை போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அதில், கடந்த வருடம் ஜூன் மாதம் விபத்தில் அடிபட்டு சிகிச்சைக்காக லால் பகதூர் சாஸ்திரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தன்னை, மருத்துவர் கௌதம் பண்டிட் மற்றும் இரண்டு போலீஸ் கான்ஸ்டபிள்கள் தன்னை பலாத்காரம் செய்ததாக அவர் தெரிவித்திருந்தார்.
இப்புகாரை அடுத்து மருத்துவர் மற்றும் காவலர்கள் இருவரையும் காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நேற்று மருத்துவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளதாக மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிகிச்சைக்கு வந்த பெண் பலாத்காரம் செய்யப் பட்ட சம்பவம் அப்பகுதி பெண்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.