ஐடிஐ நுழைவுத் தேர்வு ஹால் டிக்கெட்டில் நாயின் போட்டோ: மாணவர் அதிர்ச்சி
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் ஐடிஐ நுழைவுத் தேர்வுக்கான அனுமதி சீட்டில் மாணவரின் புகைப்படத்திற்கு பதிலாக நாயின் புகைப்படம் இருந்துள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள மிட்நாபூரைச் சேர்ந்தவர் சௌம்யதீப் மஹதோ(18). அவர் ஐடிஐ நுழைவுத் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தார். நுழைவுத் தேர்வுக்கான அனுமதி சீட்டை ஐடிஐ தேர்வு இணையதளத்தில் இருந்து அவர் பதிவிறக்கம் செய்தார்.
அனுமதி சீட்டில் மஹதோவின் புகைப்படத்திற்கு பதிலாக அவரது பெயர், முகவரியுடன் ஒரு நாயின் புகைப்படம் இருந்ததை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு நாயின் புகைப்படத்தை நீக்கிவிட்டு மஹதோவின் புகைப்படத்தை அனுமதி சீட்டில் ஒட்டியுள்ளனர்.
புதிய அனுமதி சீட்டை பதிவிறக்கம் செய்த அவர் இன்று நுழைவுத் தேர்வை எழுதினார். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நுழைவுத் தேர்வுக்கான அனுமதி சீட்டில் நாயின் புகைப்படம் இருந்தது பலரையும் வியக்க வைத்துள்ளது.