முத்தலாக் விவகாரத்தில் அரசியல் வேண்டாம்.. இஸ்லாமியர்களுக்கு மோடி வேண்டுகோள்!
முத்தலாக் கூறி விவாகரத்து செய்யும் முறைக்கு எதிராக இஸ்லாமிய அறிஞர்கள் உரிய நடவடிக்கையை எடுப்பார்கள் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
டெல்லி:முத்தலாக் விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என்றும்,முத்தலாக் கூறி விவகாரத்து செய்யும் முறைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இஸ்லாமிய அறிஞர்கள் முன்வருவார்கள் என்றும் நம்புவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இஸ்லாமிய மதத்தில் ஒருவர்,தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்ய 3 முறை 'தலாக்' கூறும் 'முத்தலாக்' அமலில் உள்ளது. இது தொடர்பான வழக்கில் 'முத்தலாக்' முறை அரசியல் சாசனத்துக்கு எதிரானது எனவும், முஸ்லிம் பெண்களின் உரிமைகளைப் பறிக்கிறது எனவும் அலகாபாத் ஹைகோர்ட் தீர்ப்பு அளித்தது.இது தொடர்பான வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் உள்ளது, அதில் முத்தலாக் முறைக்கு ஆதரவாக அனைத்து இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியமும், எதிராக மத்திய அரசும் வாதிட்டு வருகின்றன.
இந்த நிலையில் முத்தலாக் விவகாரம் அரசியலாக்கப்பட கூடாது என பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார். கன்னட கவிஞர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி பசவேஸ்வர் பிறந்தநாள் விழாவில் பேசியபோது பிரதமர் மோடி இவ்வாறு தெரிவித்தார். இந்த பிரச்சனையில் இருந்து நம்முடைய தாய்மார்கள் மற்றும் சகோதரிகளை பாதுகாக்க இஸ்லாமிய சமுதாயத்தை அறிஞர்கள் முன்வர வேண்டும் எனவும் மோடி அழைப்பு விடுத்து உள்ளார்.