நினைவுச் சின்னம் வேண்டாம்...என் நினைவாக மரங்கள் நடுங்கள் - அனில் மாதவ் தவே கடைசி ஆசை
என் நினைவாக மரங்கள் நடுங்கள் என மறைந்த அமைச்சர் அனில் மாதவ் தவே தனது கடைசி விருப்பமாக கூறியுள்ளார்.
டெல்லி: என் நினைவாக மரங்கள் நடுங்கள்... எனக்கு நினைவிடம் எதுவும் வேண்டாம் என மறைந்த அமைச்சர் அனில் தவே தனது இறுதி விருப்பத்தில் தெரிவித்துள்ளார். மத்திய சுற்றுசூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் அனில் மாதவ் தவே இன்று காலமானார்.
1956ஆம் ஆண்டு ஜூலை 6ஆம் தேதி மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் பிறந்தார். இளைமை காலத்தில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் இணைந்து, பாஜனதாவில் தன்னுடைய அரசியல் வாழ்க்கையை தொடங்கியவர். சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஆர்வம் கொண்ட அவர் திருமணமே செய்து கொள்ளவில்லை.
இந்தூரில் உள்ள குஜராத்தி கல்லூரியில் எம்.காம் படித்த அனில் மாதவ் நர்மதை நதி பாதுகாப்பு இயக்கத்தில் தீவிர பங்காற்றினார். அனில் மாதவ் தவே கடந்த 2009-ம் ஆண்டு முதல் ராஜ்யசபா உறுப்பினராக இருக்கிறார்.
கடந்த 2012ஆம் இவர் ஒரு பதிவில் தனக்கு ஏதாவது கைமாறு செய்ய நினைத்தால் எனக்கு நினைவிடம் எதுவும் எழுப்ப வேண்டாம். என் நினைவாக மரங்கள் நடுங்கள், என அனில் மாதவ் தவே தனது இறுதி விருப்பத்தை தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு மோடியின் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றார் தவே. இவருக்கு நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு இருந்தது, இதற்காக சிகிச்சையும், ஜனவரி மாதம் கூட தீவிர சிகிச்சையில் இருந்த அவர், ஜல்லிக்கட்டு போட்டி தமிழகத்தில் நடைபெற வேண்டும் என்று ஆர்வத்துடன் கருத்துக்களை தெரிவித்து வந்தார்.
இன்று காலை தனது வீட்டில் இருந்த அமைச்சர் திடீரென அசவுகரியமாக உணர்வதாகக் கூறியுள்ளார். இதனையடுத்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். தனது மரணத்தை முன்பே உணர்ந்துதானோ என்னவோ, என் நினைவாக மரங்களை நடுங்கள் என்று கூறியுள்ளார்.