மோடி மனைவி பற்றி செய்தி... அகமதாபாத்திலிருந்து அந்தமானுக்கு தூக்கியடிக்கப்பட்ட டிடி அதிகாரி!
அகமதாபாத் : பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி யசோதாபென் பற்றிய செய்தியை ஒளிபரப்பு செய்த தூர்தர்ஷன் அதிகாரி அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியும் அவரது மனைவி யசோதாபென்னும் நீண்ட காலமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் சமீபத்தில் தனக்கு அளிக்கப்பட்டுள்ள போலீஸ் பாதுகாப்பு குறித்து விளக்கம் கேட்டு, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் யசோதபென் மனுதாக்கல் செய்து இருந்தார்.
இது தொடர்பான செய்தி கிர்னாரில் உள்ள தூர்தர்ஷனின் குஜராத்தி மொழி சேனல் கடந்த ஜனவரி 1-ந் தேதி ஒளிபரப்பியது. அதனைத் தொடர்ந்து, இந்த செய்தியை ஒளிபரப்பு செய்த உதவி இயக்குநர் வனோலின் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பணியில் இருந்து ஓய்வு பெற சுமார் 2 ஆண்டுகளே உள்ள நிலையில், அந்த அதிகாரி அகமதாபாத்தில் இருந்து அந்தமானில் உள்ள போர்ட்பிளேருக்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, வனோலின் இடமாற்றத்துக்கும் குறிப்பிட்ட சம்பவத்துக்கும் தொடர்பு இல்லை என்றும், செய்திப்பிரிவு மற்றும் நிர்வாக முடிவின் அடிப்படையில் அவர் இடமாற்றம் செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சக அதிகாரி ஒருவர் விளக்கமளித்துள்ளார்.