அம்மா ‘அத்துமீறி’ நடந்து கொள்கிறார்’... டெல்லி போலீசில் கல்லூரி மாணவி பரபரப்பு பாலியல் புகார்
டெல்லி: கல்லூரி மாணவி ஒருவர் தனது தாயே தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக போலீசில் புகார் அளித்த சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் டெல்லியில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வரும் மாணவி, போலீசில் புகார் ஒன்று அளித்துள்ளார். அந்தப் புகாரில், ‘சிறுவயது முதலே தனது தாய் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக' அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சிறு வயதில் தாயின் நடவடிக்கைகள் தனக்கு சந்தேகத்தை அளிக்கவில்லை என்றும், ஆனால் காலப்போக்கில் அவரது தவறான நோக்கத்தை தான் புரிந்து கொண்டதாகவும் அம்மாணவி தெரிவித்துள்ளார்.
தனிமைப் படுத்தினார்...
பள்ளி மற்றும் கல்லூரியில் நடந்த கலை நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்ள விடாமல் அம்மாணவியை அவரது தாயார் தடுத்து வந்துள்ளார். அதோடு தோழிகளோடு சேரவும் அவர் அனுமதிக்கவில்லை. எனது பெற்றோர் பல சமயம் என்னை வீட்டில் வைத்துப் பூட்டி விடுவார்கள்.
தந்தையும் உடந்தை...
மேலும் ‘எனது தந்தையின் துணையோடு என்னை வெளியுலகத் தொடர்புகள் இல்லாதபடி பார்த்துக் கொண்டார் எனது தாயார். பெற்றோர் கொடுமையால் இத்தனை காலமாக நான் சித்திரவதையை அனுபவித்து வந்தேன்' எனத் தெரிவித்துள்ளார் அம்மாணவி.
போலீசில் புகார்...
பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அம்மாணவி, தனது தாயாரின் நடவடிக்கைகள் எல்லைமீறவே, அவர் மீது போலீசில் புகார் அளித்து விட்டார்.
விசாரணை...
தற்போது புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஆனால், மகளின் குற்றச்சாட்டுகளை அந்தத் தாய் மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.