துணை ஜனாதிபதி தேர்தல்: 'டம்மி' தேர்தலில் செல்லாத ஓட்டு போட்ட 16 தே.ஜ.கூ எம்பிக்கள்!
துணை குடியரசுத்தலைவர் தேர்தல் டம்மி வாக்குப்பதிவின் போது 16 எம்பிகள் செல்லாத ஓட்டு போட்டது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
டெல்லி : துணை குடியரசுத் தலைவர் தேர்தலையொட்டி நேற்று நடைபெற்ற மாதிரி வாக்குப் பதிவின் போது தேசிய ஜனநாயகக் கூட்டணியை சேர்ந்த 16 எம்பிகள் செல்லாத ஓட்டை போட்டுள்ளனர்.
துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வெங்கய்ய நாயுடுவும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் வேட்பாளராக கோபால கிருஷ்ண காந்தியும் போட்டியிடுகின்றனர். இன்று நடைபெறும் தேர்தலையொட்டி நேற்று மாதிரி ஒட்டுப்பதிவு நடத்தப்பட்டுள்ளது அதில் 16 தேசிய ஜனநாயகக் கூட்டணியின் எம்பிக்கள் செல்லாத ஓட்டுகளை போட்டுள்ளனர்.
சட்டம் பயின்ற எம்பிக்களே இப்படி தப்பாக ஓட்டு போட்டதால் டென்ஷன் ஆன பாஜக தலைவர் அமித்ஷா அவர்களுக்கு மீண்டும் எப்படி வாக்குப்பதிவு செய்வது என்ற பயிற்சியை அளிக்க வலியுறுத்தினாராம்.
இதனையடுத்து பயிற்சி எடுத்துக்கொண்ட எம்பிக்கள் இன்று வாக்குப்பதிவு செய்துள்ளனர். வாக்கு எண்ணிக்கை முடிவில் தான் மீண்டும் எத்தனை எம்பிக்கள் ஓட்டு போடுவதில் கோட்டை விட்டனர் என்பது தெரியவரும்.
சமீபத்தில் நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில், எம்.எல்.ஏ.,க்களும், எம்.பி.,க்களும் ஓட்டு போட்டனர். இதில், 77 ஓட்டுக்கள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டது. இதில், 21 ஓட்டுக்கள் எம்.பி.,க்கள் போட்டவை.
துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் எம்.பிக்கள் மட்டுமே ஓட்டு போட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.