ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல். இரு மாநிலங்களிலும் காங்கிரஸ் சாதிக்குமா? சறுக்குமா?
டெல்லி: சட்டசபை தேர்தல்களில் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்துள்ள காங்கிரஸ் கட்சி ஜம்மு காஷ்மீர் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் எப்படியான வியூகம் வகுக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்ட் மாநில சட்டசபைக்கு 5 கட்டங்களாக நவம்பர் 25-ந் தேதி முதல் தேர்தல் நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் சம்பத் இன்று அறிவித்தார். இந்த இருமாநிலங்களிலும் நடைபெறும் கூட்டணி ஆட்சியில் காங்கிரஸ் கட்சியும் இடம்பெற்றுள்ளது.
மாநிலங்கள் நிலவரம்
ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைமையிலான அரசில் காங்கிரஸ் இடம்பெற்றுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் காங்கிரஸ் கை கோர்த்துள்ளது.
ஜம்மு காஷ்மீர்
ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கு 2008ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மொத்தம் உள்ள 87 இடங்களில் தேசிய மாநாட்டுக் கட்சி 28, காங்கிரஸ் 20 தொகுதிகளைக் கைப்பற்றியது. மக்கள் ஜனநாயகக் கட்சி 21 இடங்களையும் பாஜக 11 இடங்களையும் கைப்பற்றியிருந்தது. இதனைத் தொடர்ந்து தேசிய மாநாட்டுக் கட்சியும் காங்கிரஸும் இணைந்து கூட்டணி அரசை அமைத்தன.
ஜார்க்கண்ட்
ஜார்க்கண்ட் மாநிலத்தில் 2009ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 81 இடங்களில் காங்கிரஸ் கூட்டணி 25, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 18, பாஜக 18 இடங்களைக் கைப்பற்றின. அப்போது பாஜக கூட்டணியில் இருந்த ஐக்கிய ஜனதா தளம் 2 தொகுதிகளைக் கைப்பற்றியிருந்தது. மேலும் ராஷ்டிரிய ஜனதா தளம் 5, ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா 11 தொகுதிகளைக் கைப்பற்றியிருந்தது. ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா காங்கிரஸ் அணியில் இருந்தது.
ஆட்சியை பறிகொடுத்த காங்கிரஸ்
காங்கிரஸ் கட்சியானது தற்போது கேரளா, கர்நாடகா, அருணாசலப்பிரதேசம், அஸ்ஸாம், இமாச்சல், மணிப்பூர், மிசோரம், மேகலாயா, உத்தர்காண்ட் மாநிலங்களில் ஆட்சியில் இருக்கிறது. அண்மையில் நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில் மகாராஷ்டிரா மற்றும் ஹரியானவில் ஆட்சியைப் பறிகொடுத்தது காங்கிரஸ்.
வரிந்து கட்டும் வியூகம்
இந்த ஒரு மாநிலங்களிலும் பாஜக செல்வாக்கான நிலையில்தான் இருக்கிறது. இதனால் இரு மாநிலங்களிலும் கூட்டணி ஆட்சியைத் தக்க வைக்க காங்கிரஸ் அணியும் எப்படியும் ஆட்சியில் அமர்ந்துவிட பாஜகவும் வரிந்து கட்டி பிரசாரம் செய்யும் என்பதே யதார்த்தம்