இரட்டை இலை பெற லஞ்சம்... மேலும் ஒரு ஹவாலா ஏஜென்ட் கைது
இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் மேலும் ஒரு ஹவாலா ஏஜென்ட் கைது செய்யப்பட்டுள்ளார்.
டெல்லி: இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் பாபு என்ற மேலும் ஒரு ஹவாலா ஏஜென்ட்டை டெல்லி போலீஸார் இன்று கைது செய்துள்ளனர்.
இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் இடைத்தரகர் சுகேஷ் சந்திரா, டிடிவி தினகரன் ஆகியோருடன் தினகரனின் நண்பர் மல்லிகார்ஜுனன் என்பவரும் கைது செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக சுகேஷும், தினகரனும் பேசிய ஆடியோ ஆதாரங்கள் கிடைத்தனர். இந்நிலையில் அவர்களை டெல்லி நீதிமன்ற நீதிபதி பூனம் சௌதரி முன்பு போலீஸார் ஆஜர்படுத்தினர். இதில் சுகேஷுக்கு மே 11-ஆம் தேதி வரையும், தினகரன், மல்லிக்கு மே 15-ஆம் தேதி வரையும் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து அவர்களை திகார் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் ரூ.10 கோடி பணமானது ஹவாலா ஏஜென்டுகள் மூலம் சென்னையிலிருந்து கொச்சி வழியாக டெல்லியில் உள்ள சுகேஷுக்கு கைமாறியதாக கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் நரேஷ் என்ற ஹவாலா ஏஜென்ட் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டார். மேலும் அன்றைய தினமே தாய்லாந்தில் இருந்து டெல்லி விமான நிலையத்துக்கு வந்த மற்றொரு ஏஜென்ட்டும் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் பாபு பாய் என்ற மற்றொரு ஹவாலா ஏஜென்ட்டை போலீஸார் இன்று கைது செய்தனர். இவர் இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் நரேஷ், சுகேஷ் ஆகியோருக்கு உதவியிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். அதன்படி அவரிட்ம விசாரணை நடைபெற்று வருகிறது.