ஸ்டிங் ஆபரேஷனில் சிக்கிய ஆம் ஆத்மிக்கு நற்சான்று கொடுக்கலையே... தேர்தல் ஆணையம்
டெல்லி: சட்டவிரோதமாக பணம் பெற்ற போது ஸ்டிங் ஆபரேஷனில சிக்கிய ஆம் ஆத்மி கட்சிக்கு நற்சான்று ஏதும் கொடுக்கவில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
டெல்லி சட்டசபை தேர்தலில் போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய வேட்பாளர்கள் பலரும் கருப்பு பணத்தை சட்டவிரோத சக்திகளிடம் இருந்து பெறுவதை வீடியோ எடுத்து தொலைக்காட்சிகள் ஒளிபரப்பின. அத்துடன் இந்த சிடிக்கள் தேர்தல் ஆணையத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.
இது தொடர்பாக தேர்தல் ஆணையமும் ஆம் ஆத்மி கட்சிக்கு விளக்கம் கேட்டிருந்தது. இந்நிலையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால், இந்த ஸ்டிங் ஆபரேஷன் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தமது கட்சி மீது எந்த தவறும் இல்லை என்று நற்சான்றிதழ் கொடுத்துவிட்டதாக கூறியிருந்தார்.
ஆனால் தேர்தல் ஆணையர் பிரம்மாவோ, இதை மறுத்துள்ளார். அப்படி ஒன்றும் ஆம் ஆத்மி கட்சிக்கு நற் சான்றிதழ் கொடுக்கவில்லை என்றார்.