ஒரே நாளில் நாட்டின் 40 இடங்களில் அமலாக்கப் பிரிவு அதிரடி ரெய்டு
டெல்லி: கறுப்பு பணத்தை கண்டுபிடிக்கும் விதமாக நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 40 இடங்களில் அதிரடி சோதனை நடத்தியுள்ளது மத்திய அமலாக்கப் பிரிவு.
கறுப்பு பணத்தை ஒழிக்க 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி கடந்த 8ம் தேதி இரவு அறிவித்தார். அதன் பிறகு கறுப்பு பணத்தை கண்டுபிடிக்க நாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற இந்த மாத இறுதி வரை கால அவகாசம் உள்ளது. மோடியின் அதிரடி நடவடிக்கையால் நாட்டில் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்த சூழலில் கறுப்பு பணத்தை பதுக்கி வைப்பதை கண்டுபிடிக்க நாணய மாற்றும் மையங்கள், ஹவாலா டீலர்களுக்கு சொந்தமான இடங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மத்திய அமலாக்கப் பிரிவு அதிரடி சோதனை நடத்தி வருகிறது.
நேற்று மட்டும் டெல்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட நகரங்களில் 40 இடங்களில் மத்திய அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்.
கொல்கத்தாவில் டாக்டர் ஒருவரிடம் இருந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள புதிய 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ன. கொல்கத்தாவில் ரூ. 4 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.