சிபிஐ ரெய்டு.. அடுத்து அமலாக்கத்துறை வழக்குப் பதிவு.. கார்த்தி சிதம்பரத்திற்கு முற்றுகிறது நெருக்கடி
சிபிஐ ரெய்டு நடத்தியதை அடுத்து அமலாக்கத்துறை கார்த்தி சிதம்பரத்தின் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது.
டெல்லி: முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தின் வீடுகளில் இரு தினங்களுக்கு முன் 6 மணி நேரத்திற்கும் மேலாக சிபிஐ சோதனை நடைபெற்றது.
நுங்கம்பாக்கத்தில் உள்ள சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் வீடுகள், அலுவலகங்களில் சிபிஐ சோதனை நடத்தப்பட்டது. மேலும், காரைக்குடி, டெல்லி, நொய்டா உள்பட 16 இடங்களில் உள்ள சிதம்பரம் குடும்பத்தினருக்கு சொந்தமான இடங்கள், அலுவலகங்களில் சோதனை நடைபெற்றது.
பீட்டர் முகர்ஜி மற்றும் இந்திராணி முகர்ஜி ஆகியோர் செய்த பெரும் முதலீடு விவகாரத்தில் கார்த்தி பெயரும் அடிபட்டது தொடர்பாக இந்த ரெய்டு நடைபெற்றது. 2007-2008ம் ஆண்டில் வெளிநாடு முதலீட்டு மேம்பாட்டு வாரியம் மூலம், ஐஎன்எக்ஸ் மீடியா குழுமத்திற்கு ஒப்புதல் வழங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கு இது என சிபிஐ வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
அந்நிய முதலீட்டிற்கு ஒப்புதல் வழங்கியதற்கு பிரதிபலனாக கார்த்தி சிதம்பரத்திற்கு, ஐஎன்எக்ஸ் மீடியா குழுமம், ரூ.90 லட்சம் லஞ்சம் கொடுத்துள்ளதாக அமலாக்கத்துறை ஏற்கனவே தெரிவித்திருந்தது. ரெய்டைத் தொடர்ந்து, கார்த்தியை அவரின் அலுவலகத்திற்கு சிபிஐ அதிகாரிகள் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், அமலாக்கத் துறையினர் கார்த்தி சிதம்பரத்தின் மீது தனி வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளனர். சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள அமலாக்கத் துறையினர் கார்த்தி சிதம்பரத்திடம் தீவிர விசாரணை நடத்த உள்ளனர்.