ரூ6 ஆயிரம் கோடி மருந்து ஊழல்: பஞ்சாப் அமைச்சருக்கு சம்மன்! ராஜினாமா செய்ய வலியுறுத்தல்!!
சண்டிகர்: ரூ.6,000 கோடி மருந்து ஊழல் வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு பஞ்சாப் மாநில வருவாய்த் துறை அமைச்சர் விக்ரம் சிங் மஜிதியாவுக்கு அமலாக்கத் துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர். இதனையடுத்து விக்ரம் சிங் மஜிதியா ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஆளும் அகாலிதளத்தின் கூட்டணி கட்சியான பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
தடை செய்யப்பட்ட போதை மருந்துகள் வைத்திருந்ததாக அனூப் சிங் என்ற வெளிநாடு வாழ் இந்தியரை கடந்த 2013-ஆம் ஆண்டு பஞ்சாப் போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சட்டவிரோதமான மருந்துகளை சில மருந்து நிறுவனங்கள் உற்பத்தி செய்வது தெரிய வந்தது.
இந்த வகையான மருந்துகள் சர்வதேச அளவில் கடத்தப்படுவதும், இதில் அரசு அதிகாரிகள், அரசியல் பிரமுகர்களுக்குத் தொடர்பு இருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அந்த மாநிலத்தில் காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த ஜெகதீஷ் போலா, மருந்து உற்பத்தி நிறுவன உரிமையாளர்கள் பிட்டு, ஜெகஜித் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சர்வதேச போதை மருந்து வியாபாரிகளுக்கும், பஞ்சாப் மாநில அமைச்சர் மஜிதியாவுக்கும் தொடர்பு இருப்பதாகத் தெரிய வந்துள்ளது. மேலும் சர்வதேச போதை மருந்துத் தரகர் சத்பிரீத் சட்டா இந்தியா வந்த போது, அவருக்கு கார், பாதுகாப்பு வசதிகளை அமைச்சர் செய்து கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து வரும் 26-ந் தேதி அமலாக்கத் துறை இயக்குநரகத்தில் ஆஜராகுமாறு அமைச்சர் மஜிதியாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. போதை மருந்துக் கடத்தல், சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் உள்ளிட்டவை குறித்து அவரிடம் கேள்வி கேட்கப்படும் என்ற அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நிலையில், மஜிதியா தமது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று பஞ்சாப்பின் ஆளும் சிரோன்மணி அகாலிதளத்தின் கூட்டணி கட்சியான பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. மேலும் இந்த வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.