நீட் தேர்வு விலக்கு குறித்து இன்று முக்கிய முடிவுகள்?... மோடியை சந்தித்தார் எடப்பாடி
நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சந்தித்து பேசினார்.
டெல்லி: நீட் விலக்கு தொடர்பாக தாக்கல் செய்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தினார்.
நீட் தேர்வு எனப்படும் தேசிய தகுதிகாண் தேர்வு தமிழகத்தில் இந்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் ஏழை, கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவர் என்று தமிழகம், புதுச்சேரி மாநில கட்சிகள் கூறிவருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களையும் கட்சிகள் நடத்திவிட்டன.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கும் மசோதா தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டது. ஆனால் அது மத்திய அமைச்சர்களிடமே உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழக அமைச்சர்களும் மத்திய அமைச்சர் நட்டாவை பலகட்டங்களாக சந்தித்து நீட் தேர்வுக்கு விலக்களிக்க கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
டெல்லியில் புதிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று பதவியேற்றுக் கொள்ளவுள்ளார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, 6 அமைச்சர்கள் டெல்லி சென்றுள்ளனர். இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக பிரதமர் நரேந்திர மோடியை எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து பேசினார்.
அப்போது நீட் தொடர்பாக தமிழக சட்டசபையில் நிறைவேற்ற மசோதாவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும், நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கும்படியும் அவர் கோரிக்கை விடுத்தார். அவருடன் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், தங்கமணி, வேலுமணி, ஜெயகுமார் உள்ளிட்ட அமைச்சர்கள் இருந்தனர்.
நீட் தேர்வு குறித்து இன்று முக்கிய முடிவுகள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில் இந்த சந்திப்பு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.