1 மாத ஊதியமாவது (2012 ஆகஸ்ட் மாத ஊதியம்) தரக் கோரி கதறும் கிங்பிஷர் ஊழியர்கள்!
ஏராளமான நிதிப் பிரச்சனைகளில் சிக்கிய கிங்பிஷரின் லைசென்ஸ் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வாபஸ் பெறப்பட்டு அந்த விமான நிறுவனத்தின் சேவை முடக்கப்பட்டது.
இதில் பணியாற்றிய ஊழியர்களுக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதத்துக்கான ஊதியம் மட்டும் இந்தாண்டு ஏப்ரலில் வழங்கப்பட்டது. இதனால் கடந்த ஆகஸ்ட் முதல் இந்த ஆகஸ்ட் வரையிலான ஓராண்டு ஊதியத்தை நிலுவை வைத்துள்ளார் அதன் அதிபர் விஜய் மல்லையா.
கடந்த மார்ச் மாத நிலவரப்படி இந்த நிறுவனத்தில் 2,851 ஊழியர்கள் பணியாற்றினர்.
இந் நிலையில், உடனடியாக ஒரு மாத ஊதியத்தையாவது உடனடியாக வழங்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் ஊழியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கான நோட்டீஸை 10 நாட்களுக்கு முன்பே விஜய் மல்லையா தரப்புக்கு ஊழியர்கள் வழங்கிவிட்டனர். மேலும் சில ஊழியர்கள் மும்பையில் கிங்பிஷர் அதிகாரிகளை சந்தித்துப் பேசியும் ஊதியம் தொடர்பாக எந்த உத்தரவாதமும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.