திரும்பத் திரும்ப அதையே பேசறீங்களே... கெஜ்ரிவாலுக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை
டெல்லி: தொடர்ந்து தேர்தல் விதிமீறலில் ஈடுபட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
டெல்லி சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், ‘பா.ஜ.க மற்றும் காங்கிரசாரிடம் பணம் வாங்கிக்கொண்டு ஆம் ஆத்மிக்கு ஓட்டு போடுங்கள்' எனப் பேசியது சர்ச்சையை உண்டாக்கியது.
இதுதொடர்பாக பாஜக மற்றும் காங்கிரஸ் சார்பில் தேர்தல் ஆணையத்தில் தனித்தனியாக புகார் அளிக்கப் பட்டது. அதன்பேரில், கெஜ்ரிவாலுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியது.
ஆனபோதும், தொடர்ந்து அவர் அதேபாணியில் பிரச்சாரம் செய்து வருகிறார். எனவே, தேர்தல் ஆணையமும் தொடர்ந்து அவருக்கு நோட்டீஸ் அனுப்பி வருகிறது.
இந்நிலையில், தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்ட உத்தரவில், ‘தேர்தல் விதிமீறலில் ஈடுபடுவதை கைவிடுமாறு கெஜ்ரிவாலுக்கு உத்தரவிட்டுள்ளது. இனிமேலும் விதிமீறலில் ஈடுபட்டால், கடும் நடவடிக்கை எடுக்க வேண்டி இருக்கும்' என்றும் எச்சரித்துள்ளது.