தேர்தல் நடைமுறையில் தலையீடு: ஆளுநர் ரோசய்யா கடிதத்திற்கு தேர்தல் ஆணையம் அதிருப்தி
டெல்லி: தமிழகத்தில் கடந்த 16-ந் தேதி 232 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற்றது. வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக எழுந்த புகாரால் தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதி தேர்தல்கள் மே 23-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டன.
இந்த 2 தொகுதிக்கான தேர்தலை உடனே நடத்த வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இதனிடையே இந்த தேர்தல்கள் ஒத்திவைப்புக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்தது. அப்போது தேர்தல் ஆணையம் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதி தேர்தல்களை ஜூன் 13-ந் தேதிக்கு ஒத்திவைத்திருப்பதாக தெரிவித்தது.
இது அரசியல் கட்சிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த 2 தொகுதி தேர்தல்கள் தொடர்பாக அரசியல் கட்சிகளின் கருத்துகளை மே 27-ந் தேதிக்குள் கேட்டு முடிவெடுக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. தஞ்சாவூர், அரவக்குறிச்சி தேர்தலை மே 31-ந் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று தஞ்சாவூர் அதிமுக வேட்பாளர் ரங்கசாமி, அரவக்குறிச்சி அதிமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி ஆகிய இருவரும் தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் மனு கொடுத்தனர்.
இதேபோல 2 தொகுதி திமுக வேட்பாளர்களான அஞ்சுகம் பூபதி, கேசி பழனிச்சாமி ஆகியோரும் தேர்தலை விரைவாக நடத்த கோரி லக்கானியிடம் மனு அளித்திருந்தனர்.
இந்நிலையில் 2 நாட்கள் முன்பு, தமிழக ஆளுநர் ரோசய்யா, தலைமை தேர்தல் ஆணையருக்கு எழுதிய கடிதத்தில், தஞ்சை, அரவக்குறிச்சி ஆகிய இரு தொகுதிகளுக்கும் முன்கூட்டியே தேர்தல் நடத்த வேண்டும் என்பதே மக்களின் விருப்பம் எனவே இரு தொகுதிகளுக்கும் ஜுன் 1ம் தேதிக்கு முன்பாக தேர்தல் நடத்த வேண்டும் என்று கூறியிருந்தார்.
ரம்ஜான் நோன்பு, ராஜ்யசபா தேர்தலில் எம்எல்ஏக்களின் வாக்குரிமை பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களை ரோசய்யா தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
ரோசய்யாவின் இக்கடிதம் அதிமுகவுக்கு ஆதரவாக உள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். தமிழக தலைமை தேர்தல் அதிகாரி லக்கானி மற்றும் ஆளுநர் ரோசய்யா பதவி நீக்கத்திற்கு தகுதியானவர்கள் என ராமதாஸ் காட்டமாக கூறியிருந்தார்.
இந்த நிகழ்வை தலைமை தேர்தல் ஆணையமும் ரசிக்கவில்லை. இரு தொகுதிகளுக்கும் ஜூன் 13ம் தேதி தேர்தல் நடைபெறாது என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்த அதேநேரம், ஆளுநர் ரோசய்யா, இவ்வாறு ஒரு பரிந்துரை கடிதம் அனுப்பியதை தவிர்த்திருக்கலாம் என்று கூறியுள்ளது.
ஆளுநர் மற்றும் தேர்தல் ஆணையம் இரண்டுமே, அரசியல் சாசனம் உருவாக்கிய பதவிகளாகும். எனவே இவ்விரு பதவிகளிலுள்ளோர் முரண்படக்கூடாது, ஒருவர் பணியில் மற்றவர் குறுக்கிட கூடாது என்பது அரசியல் வல்லுநர்கள் கருத்தாக உள்ளது.