வாக்குப்பதிவு இயந்திர கோளாறு:அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட்ட தேர்தல் ஆணையம் முடிவு!
வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பானது என்பதை நிரூபிக்கும் வகையில் விரைவில் அனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி கூறியுள்ளார்.
டெல்லி: தற்போது நடைமுறையில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு உள்ளதா அதை எப்படி சரி செய்யலாம் என்பது குறித்து ஆலோசனை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
இதனையடுத்து விரைவில் நாடு தழுவிய அளவில் அனைத்துக்கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி அறிவித்துள்ளார்.
அண்மையில்,உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப், மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. இந்த வாக்குப் பதிவின்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு நடைபெற்றுள்ளதாக பல அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டின.
தில்லுமுல்லு
பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் ஆகியோரும் வாக்குப்பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மை குறித்து சரமாரியாகக் கேள்வி எழுப்பினர். 16 எதிர்க்கட்சிகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை திரும்ப பெற்றுக்கொண்டு பழைய வாக்குச்சீட்டு முறையைக் கொண்டு வரவேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
தேர்தல் ஆணையம் சவால்
இந்த புகார்களை மறுத்த தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியும் என்று யாராவது நிருபிக்க முடியுமா என்று சவாலும்விடுத்திருந்தது.
அனைத்துக்கட்சிக்கூட்டம்
இது தொடர்பாக நஜீம் ஜைதி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்," விரைவில் அனைத்து கட்சி கூட்டம் நடத்த தேர்தல் கமிஷன் ஏற்பாடு செய்துள்ளது. இதில் வாக்குப்பதிவு இயந்திரங்களின் தொழில்நுட்ப பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விளக்கப்படும்.
புதிய மின்னணு இயந்திரங்கள்
இது தவிர யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் வகையிலான இயந்திரங்களையும் தேர்தல் ஆணையம் வாங்கும்.இந்த இயந்திரங்கள் அடுத்து வரும் தேர்தல்களில் பயன்படுத்தப்படும்." என்று தெரிவித்துள்ளார்.