ஆர்கே நகர் இடைத்தேர்தல் எப்போது? நஜீம் ஜைதி விளக்கம்!
ஆர்கே நகரில் எப்போது இடைத்தேர்தல் நடத்தப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி விளக்கம் அளித்துள்ளார்.
டெல்லி: சாதகமான சூழல் நிலவும்போது தேர்தல் நடத்தப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி தெரிவித்துள்ளார். மேலும் சாதகமான சூழல் குறித்து தேர்தல் ஆணையம் ஆராய்ந்து வருவதாகவும் அவர் கூறினார்.
ஆர்கே நகர் தொகுதியின் சட்டசபை உறுப்பினரான ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அந்த தொகுதி காலியானது. இதையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
ஆனால் ஆளும்கட்சி ஓட்டுக்கு பணம் கொடுத்த விவகாரம் வெளியானதையடுத்து இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்நிலையில் தலைமை தேர்தல் ஆணையர நஜீம் ஜைதி நேற்று தேர்தல் தேதியை அறிவித்தார். அப்போது ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் எப்போது நடத்தப்படும் என்று செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவர் ஆர்கே.நகர் தொகுதிக்கு தேர்தல் நடத்த சாதகமான சூழல் குறித்து தேர்தல் ஆணையம் ஆராய்ந்து வருகிறது என்றார். சாதகமான சூழல் உருவானதும் தேர்தல் நடத்தப்படும் என்றும் தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி கூறினார்.
இரட்டை இலை தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர் இரட்டை இலை சின்னம் தொடர்பாக அந்தந்த தரப்பினர் பிரமாண பத்திரங்களை அளித்துள்ளதாக கூறினார். இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்கான தேதியை தேர்தல் கமிஷன் முடிவு செய்யும். அப்போது சம்பந்தப்பட்டவர்கள் விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள் என்றும் நஜீம் ஜைதி கூறினார்.