பிரபல கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லட்சுமணன் காலமானார்: மோடி இரங்கல்
புனே: உடல்நலக் குறைவால் அவதியுற்று வந்த பிரபல கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லட்சுமணன் புனேவில் காலமானார். அன்னாருக்கு வயது 94.
50 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல்வாதிகள் குறித்து கேலிச்சித்திரங்கள் வரைந்து சமூகத்தின் பிரதிபலிப்பாக திகழ்ந்தவர் ஆர்.கே லட்சுமணன். இவர் முன்னாள் குடியரசுத்தலைவர் ஆர்.கே.நாராயணனின் சகோதரர். கடந்த சில வருடங்களாக கார்டூன்கள் வரைவதை நிறுத்தி விட்ட ஆர்.கே.லட்சுமணன், மனைவி கமலா மற்றும் மகன் ஸ்ரீநிவாசானுடன் வசித்து வந்தார்.
வயோதிகம் காரணமாக நீண்ட நாட்களாகவே உடல்நலக் குறைபாடு காரணமாக லட்சுமணன் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், சிறுநீரக தொற்று காரணமாக லட்சுமணன் கடந்த சனிக்கிழமை மாலை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டயாலிஸிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாகவும், பல முக்கிய உடல் உறுப்புகள் செயலிழந்து விட்டதாகவும் தெரிவித்தனர். இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி நேற்று அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மாலை 6.50 மணியளவில் அவர் மரணம் அடைந்தார் என்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Goodbye Dronacharya! #rklaxman #cartoon pic.twitter.com/J1jyjUOZCK
— Satish Acharya (@satishacharya) January 26, 2015
மோடி இரங்கல்:
கார்ட்டூனிஸ்ட் ஆர். கே. லட்சுமணன் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் அவர், ‘ஆர்.கே. லட்சுமணன் உங்களை இந்தியா இழக்கிறது. நம் வாழ்வில் மிகவும் தேவையான நகைச்சுவை சேர்த்ததற்கு மற்றும் எங்களது இதழ்களில் புன்னகையை வரசெய்த உங்களுக்கு கடமைப்பட்டு இருக்கிறோம். அவருடைய மறைவு நம்வாழ்க்கையில் பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருடையை குடும்பத்தார் மற்றும் எண்ணற்ற நலன் விரும்பிகளுக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்' எனக் குறிப்பிட்டுள்ளார்.