இடிந்து விழும் நிலையில் அரசு கட்டடம்.. பாதுகாப்புக்காக ஹெல்மெட் அணிந்து பணிபுரியும் ஊழியர்கள்!
பீகாரில் ஆபத்தான நிலையில் உள்ள வட்டாட்சியர் அலுவலக கட்டடத்தில் பணிபுரியும் ஊழியர்கள் ஹெல்மெட் அணிந்து பணிபுரிந்து வருகின்றனர்.
பாட்னா: பீகாரில் உள்ள அரசு அலுவலகம் ஒன்று இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் பாதுகாப்புக்காக ஹெல்மெட் அணிந்து பணிபுரிந்து வருகின்றனர்.
பீகாரின் கிழக்கு சாம்பரன் மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவலகக் கட்டடம் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. அலுவலகத்தின் மேற்கூரையிலிருந்து கற்கள் மற்றும் சிமெண்ட் ஸ்லாப்புகள் அவ்வப்போது பெயர்ந்து விழுகிறது.
அந்த கட்டடம் அபாயகரமானது என்று பீகார் மாநில பொதுப்பணித்துறையினர் கடந்த ஆண்டே அறிவித்தது. இருப்பினும் அலுவலகத்துக்காக மாற்றாக புதிய கட்டடம் ஒதுக்கப்படவில்லை. இதனால் இடிந்து விழும் நிலையில் உள்ள அந்த கட்டடத்திலேயே வட்டாட்சியர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
வேறு வழியின்றி அங்கு பணிபுரியும் ஊழியர்களும் உயிரை கையிலே பிடித்துக்கொண்டு மிகுந்த அச்சத்துடனே பணிபுரிந்து வருகின்றனர். மேற்கூரையில் இருந்து கற்கள் பெயர்ந்து விழுந்ததில் ஊழியர்கள் பலர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தங்களை பாதுகாத்துக்கொள்ள தலையில் ஹெல்மெட் அணிந்துகொண்டு அனைவரும் தங்களது பணிகளை செய்து வருகின்றனர்.
அலுவல கட்டடத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெரிய உயிர்ச்சேதம் ஏற்படுவதற்கு முன்பு அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று பீகார் அரசு மாற்று இடம் ஒதுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.