நிதி மோசடி வழக்கில் ஜெகன்மோகன் ரெட்டி, கூட்டாளியின் ரூ.863 கோடி சொத்துக்கள் முடக்கம்
ஹைதராபாத்: ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி மீதான நிதி மோசடி வழக்கு தொடர்பாக அவருக்கும், நிம்மகடா பிரசாத் என்பவருக்கும் சொந்தமான ரூ.863 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கப் பிரிவு முடக்கியுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி முதல்வராக இருந்தபோது நிம்மகட பிரசாத் என்பவரின் நிறுவனங்களுக்கு அதிக சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனங்கள் ஆந்திராவில் உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ளும் திட்டத்தை மேற்கொள்ள அரசிடம் இருந்து அனுமதி பெற்றன. அவ்வாறு அனுமதி அளித்ததற்காக பிரசாத்தின் நிறுவனங்கள் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியின் நிறுவனத்தில் ரூ.854.54 கோடி முதலீடு செய்துள்ளன.
இந்நிலையில் ஜெகன் மீது தொரடப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கின் அடிப்படையில் ஜெகன் மற்றும் பிரசாத் ஆகியோரின் மீது நிதி மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து ஜெகன் மற்றும் பிரசாத் ஆகியோருக்கு சொந்தமான ரூ.863 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கப் பிரிவு முடக்கி உள்ளது.
முன்னதாக பிரசாத் உள்கட்டமைப்பு திட்டத்தை மேற்கொள்ள நிலங்களை வாங்கியதில் அவருக்கு சட்டவிரோதமாக ரூ.1426.17 கோடி லாபம் கிடைத்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.