இருக்கு ஆனா இல்லை.... சர்ப்ரைஸ் விசிட்டில் ஷாக் ஆன அமைச்சர்!
நாக்பூர்: மகாராஷ்டிராவின் சமூக நீதித்துறை அமைச்சர் ராஜ்குமார் பாடோல் நேற்று நாக்பூர் அருகில் இருக்கும் மனவளம் குன்றியவர்கள் பயிலும் பள்ளிக்கு சென்றபோது அங்கு யாருமே இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனே விசாரணையில் இறங்கிய அவர் அங்கு 80 மாணவர்களும், 25 ஆசிரியர்களும் இருப்பதாக ஆவணங்கள் உள்ளதை கண்டார். ஆனால் பள்ளியில் தான் யாரும் இல்லை.
பக்கத்தில் இருந்த மாணவர் விடுதியில் விசாரித்தபோது அவர்கள் சொல்லியது, "ஒருவேளை எல்லோரும் விடுப்பில் சென்று இருக்கலாம்" என்று மழுப்பலான பதில் கிடைத்தது. ஆசிரியர்கள், மாணவர்கள் என எல்லோரும் ஒரே நேரத்திலா விடுமுறையில் செல்வார்கள்? என அமைச்சர் கேட்டதற்கு யாரும் பதிலளிக்க முன்வரவில்லை.
மகாராஷ்டிராவில் மனநலம் குன்றியோருக்காக மொத்தம் 120 பள்ளிகள் இருப்பதாகவும், அவை அனைத்துக்கும் சென்று இனி ஆய்வு நடத்தப்போவதாகவும் அமைச்சர் ராஜ்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்த பள்ளிகளுக்காக பல கோடி ரூபாய் மக்கள் வரிப்பணம் ஆண்டு தோறும் ஒதுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது